சென்னை ஐ.ஐ.டி. தயாரித்த மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன சக்கர நாற்காலி மத்திய மந்திரி அறிமுகப்படுத்தினார்


சென்னை ஐ.ஐ.டி. தயாரித்த மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன சக்கர நாற்காலி மத்திய மந்திரி அறிமுகப்படுத்தினார்
x
தினத்தந்தி 5 Nov 2019 11:00 PM GMT (Updated: 5 Nov 2019 8:19 PM GMT)

சென்னை ஐ.ஐ.டி. தயாரித்த மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன சக்கர நாற்காலியை, மத்திய மந்திரி தாவர் சந்த் கெலாட் அறிமுகப்படுத்தினார்.

சென்னை,

மாற்றுத்திறனாளி ஒருவர் யாருடைய உதவியும் இல்லாமல் உட்கார்ந்த நிலையில் இருந்து எழுந்து நின்றும், எழுந்து நின்று உட்காரவும் வழி செய்யும் (ஸ்டாண்டிங் வீல்சேர்) வகையிலான நவீன வகை சக்கர நாற்காலி, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி.) தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்து உள்ளது.

இதனுடைய அறிமுக விழா சென்னையில் நேற்று நடந்தது. கூடுதல் இயக்குனர் ஏ.கே.மிஸ்ரா தலைமை தாங்கினார். மத்திய சமூக நீதி மற்றும் சுயஅதிகாரத்துறை மந்திரி தாவர் சந்த் கெலாட், இந்த சக்கர நாற்காலியை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி அறிமுகப்படுத்தினார்.

மாற்றுத்திறனாளிகள் திறமை

பின்னர் மந்திரி தாவர் சந்த் கெலாட் பேசியதாவது:-

நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளின் திறமையை வெளிக்கொண்டு வர பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளில் 78 ஆயிரத்து 500 மூன்று சக்கர சைக்கிள்கள், 48 ஆயிரம் சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டு உள்ளன. இதுதவிர கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 4 சதவீத இடஒதுக்கீடும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் 7 பேர் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்து உள்ளனர்.

செயற்கை கால், கை மற்றும் செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கான கருவிகள் கான்பூரில் தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சென்னை ஐ.ஐ.டி. சார்பில் தயாரிக்கப்பட்டு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி ரூ.15 ஆயிரத்துக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த தொகை அதிகமாக இருப்பதால், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிறுவனங்களின் சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதிகளை பெற்று குறைந்த தொகையில் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுவாக இதுபோன்ற உபகரணங்களை வாங்குவதற்கு ஜெர்மன், ஜப்பான் போன்ற வெளிநாடுகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு கொள்முதல் செய்யப்படுகிறது.

விளையாட்டு பயிற்சி மையங்கள்

இனி வரும் காலங்களில் இதுபோன்ற உபகரணங்களை சென்னை ஐ.ஐ.டி. உடன் இணைந்து தயாரிக்கலாம். மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகளை பெற ஐ.ஐ.டி. சார்பில் கோரிக்கை மனு அளித்தால் அதனை முறையாக பரிசீலித்து, அரசின் உதவி கிடைக்க வேண்டிய நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் அதிகம் பேருக்கு இந்த வகை சக்கர நாற்காலி கிடைத்து அவர்களும் சாதாரண மனிதர்கள் போன்று தன்னுடைய அன்றாட பணிகளை செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே இந்த விஷயத்தில் அனைவரும் இணைந்து செயல்படுவோம்.

மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டு திறமையை மேலும் வெளிக்கொண்டு வருவதற்காக நாடு முழுவதும் 5 இடங்களில் புதிய விளையாட்டு பயிற்சி மையங்களை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

தனியார் நிறுவனங்களை சேர்ந்த சசிகுமார், ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர் டி.டி.ஜெகந்நாதன் உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பேராசிரியர் சுஜாதா ஸ்ரீநிவாசன் வரவேற்றார். பேராசிரியர் அசோக் நன்றி கூறினார்.

Next Story