விருத்தாசலம் அருகே, மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதல்; வாலிபர் பலி - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


விருத்தாசலம் அருகே, மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதல்; வாலிபர் பலி - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 6 Nov 2019 10:45 PM GMT (Updated: 6 Nov 2019 1:30 PM GMT)

விருத்தாசலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள சின்னப்பரூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகவேல் மகன் பசுபதி(வயது 25). பொக்லைன் எந்திர டிரைவர். இவருடைய மனைவி பவானி(23). நிறைமாத கர்ப்பிணியான இவரை பசுபதி மற்றும் உறவினர்கள் பிரசவத்திற்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்த்தனர்.

பின்னர் அவருக்கு தேவையான துணிமணிகள் மற்றும் பொருட்களை எடுத்து வருவதற்காக பசுபதி தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றார்.

விருத்தாசலத்தில் இருந்து மங்கலம்பேட்டை செல்லும் சாலையில் எருமனூர்ரெட்டிக்குப்பம் இடையே வந்து கொண்டிருந்தபோது அந்தவழியாக வந்த வாகனம் ஒன்று பசுபதி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் பலியான பசுபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பசுபதியின் உறவினர்கள் நேற்று காலையில் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் திரண்டனர். அப்போது அவர்கள் பசுபதியின் மீது மோதிய வாகனத்தை கண்டுபிடித்து அதை ஓட்டி வந்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கோ‌ஷம் எழுப்பினர்.

இதற்கிடையே பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட பவானிக்கு பிரசவத்திற்கு இன்னும் 10 நாட்கள் ஆகும் என கூறி அவரை டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் டிஸ்சார்ஜ் செய்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையேற்ற உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story