கடலூரில், அடுத்தடுத்து கடை, வீடுகளில் பூட்டை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு


கடலூரில், அடுத்தடுத்து கடை, வீடுகளில் பூட்டை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 6 Nov 2019 10:45 PM GMT (Updated: 6 Nov 2019 1:30 PM GMT)

கடலூரில் அடுத்தடுத்து கடை மற்றும் வீடுகளில் பூட்டை உடைத்து பணம், பொருட்களை திருடிச்சென்ற மர்ம மனிதனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கடலூர் முதுநகர், 

கடலூர் வண்டிப்பாளையம் சூரசம்காரதெருவை சேர்ந்தவர் பாக்கியராஜ்(வயது 35). இவர் அதே பகுதியில் வீட்டுடன் மளிகை கடை நடத்தி வருகிறார். பாக்கியராஜ் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சென்றார்.

இந்த நிலையில் நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கடை ‌ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர், கடைக்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த ஆவணங்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் கடையில் இருந்த ரூ.3 ஆயிரத்து 200 மற்றும் காசோலை புத்தகம் ஆகியவற்றை காணவில்லை.

இரவு நேரத்தில் மர்மநபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணம் மற்றும் காசோலையை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

பின்னர் கடையின் உள் பகுதிக்கு சென்ற மர்மநபர்கள் பக்கவாட்டு ஜன்னல் வழியாக ஒட்டறை அடிக்கும் குச்சியின் மூலம் பாக்கியராஜின் சட்டைப்பையில் இருந்த பர்சை திருடிச்சென்றுள்ளான். அதில் 4 ஏ.டி.எம். கார்டுகள், ஆதார் அட்டை, பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட அசல் ஆவணங்கள் இருந்தன.

பின்னர் பாக்யராஜின் அவரது கடைக்கு அருகில் உள்ள கர்ணன் என்பவருக்கு சொந்தமான காய்கறி கடையின் பூட்டும் உடைக்கப்பட்டு அங்கிருந்த ரூ.1,500–யையும் மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

தொடர்ந்து அதே பகுதி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த கோபால்(40) என்பவரின் வீட்டில் புகுந்த மர்மமனிதர்கள் அங்கிருந்த செம்பு பாத்திரங்கள், 3 கலச செம்புகள், தாம்பூல தட்டு ஆகியவற்றையும் திருடிச்சென்று உள்ளனர். 

இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்சுதர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து திருட்டு நடந்த கடைகள் மற்றும் வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கடைகள், வீட்டில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைரேகையை சேகரித்து சென்றனர்.

மேலும் இது தொடர்பாக கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவுசெய்து கடை மற்றும் வீட்டில் புகுந்த பணம், பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story