கூடலூர் அருகே, தனியார் பஸ் மோதி விவசாயி பலி - போலீசாருடன் உறவினர்கள் வாக்குவாதம்


கூடலூர் அருகே, தனியார் பஸ் மோதி விவசாயி பலி - போலீசாருடன் உறவினர்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 6 Nov 2019 10:45 PM GMT (Updated: 6 Nov 2019 2:32 PM GMT)

கூடலூர் அருகே தனியார் பஸ் மோதி விவசாயி பலியானார். போலீசாருடன், அவரது உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கூடலூர்,

தேனி மாவட்டம் கீழக்கூடலூர் 7-வது வார்டு பாரஸ்ட் பங்களா தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 39). விவசாயி. நேற்று முன்தினம் இவர், தனது மோட்டார் சைக்கிளில் சின்னமனூரில் இருந்து கூடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். கம்பம்-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்வபுரம் விலக்கு அருகே வந்தபோது, குமுளியில் இருந்து சென்னைக்கு சென்ற தனியார் சொகுசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த கூடலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கீதா வழக்குப்பதிவு செய்து, தனியார் பஸ் டிரைவர் குமார் (37) என்பவரை கைது செய்தார்.

இதற்கிடையே விபத்தில் பலியான செந்தில்குமாரின் உடல் நேற்று மதியம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் உடலை வாங்க மறுத்து, போலீசாருடன் அவருடைய உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சொகுசு பஸ் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இறந்த செந்தில்குமாரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். காப்பீட்டு தொகை பெற்றுத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுதம், அன்பழகன், குணா தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு வழங்கும் உதவித்தொகையை பெற்று தர ஏற்பாடு செய்வதாக போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து 2 மணி நேரத்திற்கு பிறகு அவர்கள் செந்தில்குமாரின் உடலை வாங்கி சென்றனர். உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விபத்தில் பலியான செந்தில்குமாருக்கு பவானி என்ற மனைவியும், பிரவீன்குமார் (17) என்ற மகனும், நித்யா (16) என்ற மகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story