நகையை திருடி மூதாட்டியை கொலை செய்த வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை கோர்ட்டு தீர்ப்பு


நகையை திருடி மூதாட்டியை கொலை செய்த வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 6 Nov 2019 11:00 PM GMT (Updated: 6 Nov 2019 6:59 PM GMT)

கடனை திருப்பி செலுத்த நகையை திருடி மூதாட்டியை கொலை செய்த வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து காரைக்கால் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

காரைக்கால்,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ள காரைக்கால் மேடு அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் மனைவி வளர்மதி(வயது50). இவர் கிராம மக்கள் பலரிடம் ரூ.1 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கியதாகவும், அந்த கடனை குறிப்பிட்ட காலத்தில் திருப்பி தரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் கடன் கொடுத்தவர்கள் காரைக்கால்மேடு கிராம பஞ்சாயத்தாரிடம் முறையிட்டனர். இதையடுத்து பஞ்சாயத்தார்கள் வளர்மதியிடம் கடனை திரும்ப செலுத்தும்படி அறிவுறுத்தினர். அதன்படி குறிப்பிட்ட நாளில் வளர்மதி கடனை திரும்பி செலுத்தவில்லை.

இந்த நிலையில் அதே கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த காத்தம்மாள்(71) என்பவர் மர்மமான முறையில் தனது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். முதலில் அவர் தற்கொலை செய்து கொண்டார் என கூறப்பட்டது. இதுகுறித்து காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

கடனை திருப்பி செலுத்த...

காத்தம்மாள் இறந்த ஒரு சில நாளில் வளர்மதி ரூ.80 ஆயிரம் கடன் தொகையை கிராம பஞ்சாயத்தாரிடம் ஒப்படைத்தார். இந்த பணம் எப்படி வந்தது? என பஞ்சாயத்தார் கேட்டபோது, வளர்மதி முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறி உள்ளார். இதன் காரணமாக சந்தேகம் அடைந்த கிராம பஞ்சாயத்தார், தங்கள் சந்தேகத்தை போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கடனை திருப்பி செலுத்துவதற்காக வளர்மதி, காத்தம்மாளிடம் இருந்து 5½ பவுன் நகையை திருடி விட்டு அவரை கழுத்தை நெரித்துக்கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதும், வேறு யாரோ கொலை செய்ததுபோல் காட்டுவதற்காக காத்தம்மாளின் வீட்டில் சில சிகரெட் துண்டுகளை விட்டுச்சென்று நாடகம் ஆடியதும் தெரியவந்தது.

ஆயுள் தண்டனை

இதையடுத்து போலீசார் வளர்மதி மீது கொலை, திருட்டு, சாட்சிகளை மறைத்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை காரைக்கால் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு வக்கீலாக செல்வமுத்துகுமரன் ஆஜரானார்.

இதில் நீதிபதி கார்த்திகேயன் நேற்று தீர்ப்பு கூறினார். அப்போது வளர்மதிக்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை (14 ஆண்டுகள் சிறை) விதித்து உத்தரவிட்டார். மேலும் ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால், மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், நகையை திருடிய வழக்கில், 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால், மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கும்படி உத்தரவிட்டார்.

போலீசார் மீது நடவடிக்கை

இந்த வழக்கில் வளர்மதி கொடுத்த ரூ.80 ஆயிரத்தை கிராம பஞ்சாயத்தார் போலீசாரிடம் ஒப்படைத்ததாக வழக்கு விசாரணையின் போது சாட்சி கூறியுள்ளனர். ஆனால் ரூ.80 ஆயிரத்தை போலீசார் கோர்ட்டில் ஒப்படைக்கவில்லை. இதில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி போலீஸ்துறையினரை அறிவுறுத்தினார்.


Next Story