2 மனைவிகள் இருந்த நிலையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பால் வண்டி டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது


2 மனைவிகள் இருந்த நிலையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பால் வண்டி டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 6 Nov 2019 10:45 PM GMT (Updated: 6 Nov 2019 9:52 PM GMT)

2 மனைவிகள் இருந்தநிலையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பால் வண்டி டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி, 

அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 32), பால் வண்டி டிரைவர். முதலியார்பேட்டை பகுதியில் வீடு வீடாக சென்று பால் வியாபாரமும் செய்து வந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த மாணவியின் பெற்றோர் பெரும்பாலும் வீட்டில் இருப்பது இல்லை. அந்த மாணவி மட்டும் தனியாக வீட்டில் இருந்து வந்தார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அடிக்கடி வீட்டுக்கு சென்று மாணவியுடன் பேசி வந்தார்.

அப்போது அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதை செல்போனில் படம் பிடித்து வைத்துக் கொண்டு அந்த மாணவியை மிரட்டி கடந்த 6 மாதமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் அலெக்ஸ் அடிக்கடி வந்து சென்றது அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

வழக்கம்போல் நேற்று முன்தினம் மாணவியை சந்திக்க அலெக்ஸ் வந்துள்ளார். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மாணவியின் பெற்றோருக்கு தெரிவித்து வரவழைத்தனர். அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு அலெக்ஸ் மாணவியிடம் தவறாக நடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினர்.

சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு வந்தனர். உடனே அலெக்ஸ் தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை அங்கிருந்தவர்கள் சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்தனர். இது குறித்து முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திர சாமி மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததை அலெக்ஸ் ஒப்புக் கொண்டார். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். அந்த மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்த்தனர். கைதான அலெக்சுக்கு ஏற்கனவே 2 மனைவிகளும், 2 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story