நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம்


நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 7 Nov 2019 11:00 PM GMT (Updated: 7 Nov 2019 2:38 PM GMT)

நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம் நடத்தினர். இதற்கு ஆதரவு தெரிவித்து சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 10 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே சம்பளத்தை உடனே வழங்க கோரியும், ஆள்குறைப்பு மற்றும் பணி நேரம் குறைப்பு ஆகியவற்றை கைவிட வலியுறுத்தியும் ஒப்பந்த ஊழியர்களின் பல்வேறு சங்கங்கள் சார்பில் நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.

இந்த போராட்டம் நேற்று 2–வது நாளாக நடந்தது. இதில் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சுயம்புலிங்கம், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்க மாநில துணை தலைவர் இந்திரா, செல்வம், ராஜூ உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம்

இந்த போராட்டத்துக்கு குமரி மாவட்ட சி.ஐ.டி.யு. ஆதரவு தெரிவித்து உள்ளது. மேலும் ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தி சி.ஐ.டி.யு. சார்பில் பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலக்குழு உறுப்பினர் அந்தோணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தங்கமோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story