போடியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


போடியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Nov 2019 10:30 PM GMT (Updated: 7 Nov 2019 7:34 PM GMT)

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போடி (மீனாட்சிபுரம்),

தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்திய அரசை கண்டித்து போடி திருவள்ளுவர் சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார்.

மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைத்தலைவர் சன்னாசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர் சஞ்சய்தத், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசன் ஆருண் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் சஞ்சய்தத் பேசும்போது, மத்திய அரசின் தவறான நடவடிக்கையால், இந்தியாவின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. உள்நாட்டு பிரச்சினையில் கவனம் செலுத்தாமல் பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாட்டுக்கு செல்வதால் மக்களின் விரோதத்தை சம்பாதித்துள்ளார். நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் மோடி அரசின் தவறான திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி காங்கிரஸ் தொண்டர்கள் வாக்கு சேகரிக்க வேண்டும். காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி வெற்றி பெற ராணுவ வீரர்களை போல பணியாற்ற வேண்டும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் அசன் ஆருண் பேசுகையில், மத்திய அரசின் வேலைவாய்ப்புகளை தமிழக இளைஞர்கள் பெறுவதற்கு எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு நடத்துகிற தேர்வுக்கான வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் அலுவலகங்களில் 98 சதவீத வேலைவாய்ப்புகள், தமிழர்களுக்கு கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தர்மர், முகமது ரசூல், உத்தமபாளையம் வட்டார தலைவர் மைதீன் அப்துல்காதர் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக போடி நகர காங்கிரஸ் தலைவர் முசாக் மந்திரி வரவேற்றார். முடிவில் போடி நகரசபை முன்னாள் தலைவர் சங்கரேஸ்வரன் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் அசன் ஆருண், திருவள்ளுவர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்தார். இதைத்தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு சஞ்சய்தத் சந்தனமாலை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், பிரதமர் மோடியை சந்தித்தது குறித்து சஞ்சய்தத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், இனி வருங்காலத்தில் ஜி.கே.வாசன் அரசியலில் இருந்து வெளியேறும் சூழ்நிலை ஏற் படும் என்றார்.

Next Story