பள்ளிகொண்டா: கட்டணம் செலுத்த மறுத்து சுங்கச்சாவடியில் பகுஜன்சமாஜ் வக்கீல் தகராறு - போக்குவரத்து பாதிப்பு


பள்ளிகொண்டா: கட்டணம் செலுத்த மறுத்து சுங்கச்சாவடியில் பகுஜன்சமாஜ் வக்கீல் தகராறு - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 8 Nov 2019 10:30 PM GMT (Updated: 8 Nov 2019 5:32 PM GMT)

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த மறுத்து பகுஜன்சமாஜ் கட்சி வக்கீல் தகராறில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அணைக்கட்டு, 

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். வழக்கறிஞரான இவர் பகுஜன்சமாஜ் கட்சியில் உள்ளார். நேற்று நண்பர்களுடன் கட்சிக்கொடி கட்டிய காரில் கிருஷ்ணகிரிக்கு சென்று கொண்டிருந்தார். அவரது கார் வேலூரை கடந்து பள்ளிகொண்டா சுங்கச்சாவடியை அடைந்தது.

அப்போது சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் இவர்களது கார் கடக்க முயன்றது. உடனடியாக ஊழியர்கள் இவரது கார் செல்ல முடியாத வகையில் தடுத்தனர்.

ஆனால் காரில் இருந்து இறங்காத அவர் என்பெயர் சந்திரசேகர், நான் வழக்கறிஞர் என்பதால் எனது காரை இலவசமாக அனுப்பவேண்டும் என கூறினார். அதற்கு “வழக்கறிஞர்கள் கார்களை கட்டணம் வாங்காமல் சுங்கச்சாவடி வழியாக அனுமதிக்க எங்களுக்கு மேலதிகாரிகளோ அல்லது அரசோ உத்தரவு எதையும் அனுப்பவில்லை. எனவே கட்டணத்தை செலுத்தினால்தான் நாங்கள் உங்களது காரை அனுமதிப்போம்” என கூறினர்.

உடனே காரில் இருந்த அவரது நண்பர்கள் கீழே இறங்கி வந்து கட்டணம் செலுத்துமாறு கூறிய ஊழியர்களிடம் அது குறித்து கேட்கவே வாக்குவாதம் ஏற்பட்டது. அவரது கார் சுங்கச்சாவடியை அடைத்துக்கொண்டு நின்றதால் பின்னால் வந்த பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து செல்ல முடியாமல் வரிசையாக நின்று போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியது. உடனே அலுவலகத்தில் இருந்த சுங்கச்சாவடி மேலாளர் நரேஷ் அங்கு வந்து வழக்கறிஞரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது வழக்கறிஞர் சந்திரசேகர் ஒரு கடிதத்தை மேலாளர் நரேஷிடம் காண்பித்தார். அதில் “வழக்கறிஞர்களை சுங்கச்சாவடி வழியாக செல்ல இலவசமாக அனுப்ப வேண்டும்” என்று இருந்தது. அதற்கு மறுப்பு தெரிவித்த சுங்கச்சாவடி மேலாளர் நரேஷ், “இது போன்ற உத்தரவு கடிதங்கள் இதுவரை எங்களுக்கு வரவில்லை. பணம் கட்டிவிட்டு செல்லுங்கள். இல்லையேல் உங்களது காரை அனுமதிக்க முடியாது” என கண்டிப்புடன் கூறினார். இதனையடுத்து வேறு வழியின்றி வழக்கறிஞர் சந்திரசேகர், சுங்க கட்டணத்தை செலுத்தினார். அதன்பிறகு அவரது கார் விடுவிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து சுமார் ½ மணிநேரம் ஸ்தம்பித்தது. இதனால் பஸ், கார்களில் வந்த பயணிகள் அவதிப்பட நேர்ந்தது.

Next Story