நெல்லையில் பயங்கரம்: பாலியல் பலாத்காரம் செய்து இளம்பெண் கொன்று புதைப்பு


நெல்லையில் பயங்கரம்: பாலியல் பலாத்காரம் செய்து இளம்பெண் கொன்று புதைப்பு
x
தினத்தந்தி 8 Nov 2019 11:00 PM GMT (Updated: 8 Nov 2019 9:20 PM GMT)

நெல்லையில் கோவையைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடலை புதைத்து விட்டதாக கொலை மிரட்டல் வழக்கில் சிக்கிய 2 பேர் அளித்த திடுக்கிடும் தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை, 

நெல்லை டவுன் லாலுகாபுரத்தை சேர்ந்தவர் ஜெயராம் (வயது 35). இவர் கடந்த 5-ந்தேதி டவுன் தொண்டர் சன்னதி அருகில் தனது நண்பருடன் நடந்து சென்றார். அப்போது செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்ற குண்டன் (20), ராமையன்பட்டியை சேர்ந்த ஆசீர்செல்வம் (32) ஆகியோர் ஜெயராமை வழிமறித்து அவதூறாக பேசி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுதொடர்பாக ஜெயராம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், ஆசீர்செல்வம் ஆகியோரை கைது செய்தார். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினார்.

இந்த விசாரணையின்போது அவர்கள் திடுக்கிடும் தகவல் ஒன்றையும் தெரிவித்தனர். அதாவது கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று புதைத்ததாக தெரிவித்தனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

கடந்த 2012-ம் ஆண்டு மணிகண்டன், ஆசீர்செல்வம் ஆகியோரின் நண்பர் கோவையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்குள்ள இளம்பெண்ணை அவர் காதலித்தார். அவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து நெல்லைக்கு அவர் அழைத்து வந்தார்.

இங்கு அந்த பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தார். சில நாட்கள் கழித்து அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது நண்பர் வீட்டுக்கு மணிகண்டன், ஆசீர்செல்வம் ஆகியோர் சென்றுள்ளனர். அங்கிருந்த பெண்ணை பார்த்ததும் அவர்களுக்கு ஆசை ஏற்பட்டது.

இதையடுத்து காதலன் உள்பட 3 பேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். அப்போது அந்த பெண் மயக்கம் அடைந்து விட்டார். உடனே, கழுத்தை நெரித்து அந்த பெண்ணை அவர்கள் கொலை செய்துள்ளனர். பின்னர் இரவு நேரத்தில் பெண்ணின் உடலை தச்சநல்லூர் குருநாதன் கோவில் அருகே உள்ள பகுதியில் குழிதோண்டி புதைத்து விட்டனர். அதன்பிறகு 3 பேரும் எதுவும் நடக்காதது போல் சென்று விட்டனர். காதலன் மட்டும் மும்பை சென்று வேலை செய்து வருவதாக விசாரணையில் அவர்கள் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

கொலை நடந்த இடம் தச்சநல்லூர் போலீஸ் நிலைய எல்லைக்குள் வருவதால், டவுன் போலீசார் இந்த விவரங்களை தச்சநல்லூர் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர். இதற்கிடையே, கொலை மிரட்டல் வழக்கில் கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த பயங்கர கொலை குறித்து மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள தச்சநல்லூர் போலீசார், அவர்கள் 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த நெல்லை கோர்ட்டில் அனுமதி பெற நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதே நேரத்தில் கோவையில் இருந்து குறிப்பிட்ட ஆண்டில் காணாமல் போன பெண்கள் குறித்த விவரங்களை பெற்று, மும்பையில் பதுங்கி இருக்கும் அந்த பெண்ணின் காதல் கணவரையும் பிடிக்க போலீசார் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

மேலும், இளம்பெண் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி எலும்புகளை பரிசோதனை செய்யவும் போலீசார் முடிவு செய்து உள்ளனர். கோவை இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொன்று புதைத்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story