விளாத்திகுளம் அருகே, பள்ளிக்கூடத்தில் ஆசிரியையை கத்தியால் குத்திக்கொல்ல முயற்சி


விளாத்திகுளம் அருகே, பள்ளிக்கூடத்தில் ஆசிரியையை கத்தியால் குத்திக்கொல்ல முயற்சி
x
தினத்தந்தி 9 Nov 2019 10:45 PM GMT (Updated: 9 Nov 2019 8:23 PM GMT)

விளாத்திகுளம் அருகே பள்ளிக்கூடத்தில் ஆசிரியையை கத்தியால் குத்திக்கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளாத்திகுளம், 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் தனியார் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சத்துணவு சரியாக சமைக்கப்படவில்லை என்று கூறி, சமையலர் மீனாட்சியை அதிகாரிகள் கண்டித்தனர். இதற்கு அந்த பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றும் கலைச்செல்விதான் காரணம் என்று மீனாட்சி கருதினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மீனாட்சி நேற்று பள்ளிக்கூட வளாகத்தில் கலைச்செல்வியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை கத்தியால் குத்திக்கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது. உடனே கலைச்செல்வி பள்ளிக்கூட வகுப்பறைக்குள் ஓடிச் சென்று, கதவை உள்பக்கமாக பூட்டி கொண்டார்.

இதையடுத்து பள்ளிக்கூட வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த கலைச்செல்வியின் ஸ்கூட்டரை மீனாட்சி கல்லால் தாக்கி சேதப்படுத்தினார். இதுகுறித்து கலைச்செல்வி அளித்த புகாரின்பேரில், விளாத்திகுளம் போலீசார், தலைமறைவான மீனாட்சியை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story