வேளாங்கண்ணி அருகே, மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல்; 2 வயது குழந்தை பலி போலீசார் விசாரணை


வேளாங்கண்ணி அருகே, மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல்; 2 வயது குழந்தை பலி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 10 Nov 2019 10:15 PM GMT (Updated: 10 Nov 2019 3:00 PM GMT)

வேளாங்கண்ணி அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதியதில் 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேளாங்கண்ணி,

காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினம் அருகே போலகம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். கொத்தனார். இவரும் தனது மனைவி சிலம்பரசி, மகன் முகேஷ் (வயது 2) ஆகிய 3 பேரும் நேற்றுமுன்தினம் கீழையூர் ஒன்றியம் கள்ளித்தோப்பு பகுதியில் ஒரு துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு செல்வதற்காக வேதாரண்யம் சாலையில் நாகைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது நாகையில் இருந்து வேதாரண்யம் நோக்கி எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் முகேஷ் தூக்கி வீசப்பட்டான். மேலும் சுரேஷ், சிலம்பரசி ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் முகேசை மீட்டு திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பலத்த காயமடைந்த சுரேஷ், சிலம்பரசி ஆகியோர் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story