தண்ணீர் திறப்பு எதிரொலி: குறைந்து வரும் வைகை அணையின் நீர்மட்டம்


தண்ணீர் திறப்பு எதிரொலி: குறைந்து வரும் வைகை அணையின் நீர்மட்டம்
x
தினத்தந்தி 10 Nov 2019 10:45 PM GMT (Updated: 10 Nov 2019 3:57 PM GMT)

வைகை அணையில் இருந்து 4 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் கடந்த மாதம் 65 அடியாக உயர்ந்தது. அதன்பின்னர் அணைக்கு வரும் நீர்வரத்தும், பாசனத்திற்காக வெளியேற்றப்படும் நீர்வரத்தும் ஒரே அளவில் இருந்ததால் அணை நீர்மட்டம் தொடர்ந்து 65 அடியாகவே நீடித்து வந்தது. இந்த நிலையில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் நீரை பெருக்கும் வகையில் வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக கூடுதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது.

இதனையடுத்து வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் ஆற்றின் வழியாக திறக்கப்பட்டது. ஏற்கனவே பாசனத்திற்காக வினாடிக்கு 1,130 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கண்மாய் பாசனம், விவசாயம் மற்றும் மதுரை குடிநீர் தேவைக்கும் சேர்த்து அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 4,190 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வைகை அணையில் உள்ள 7 பிரதான மதகுகள் மற்றும் 7 சிறிய மதகுகள் என 14 மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறி வருகிறது. இதன்காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் சரிய தொடங்கியுள்ளது. அணை நீர்மட்டம் ஒரு நாளில் 1 அடி குறைந்து 64 அடியாக இருந்தது.

தண்ணீர் திறப்பால் அணை முன்பாக இருகரைகளையும் இணைக்கும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் அந்த பாலத்தில் இறங்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வைகை அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஒருபக்கம் உள்ள பூங்காவை மட்டுமே சுற்றிபார்த்துவிட்டு சென்றனர். வைகை அணையில் இருந்து அதிகமான தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை நுண்புனல் நீர்மின் நிலையத்தில் முழு அளவில் மின்சார உற்பத்தி தொடங்கி உள்ளது. வைகை அணைக்கு நீர்வரத்து குறைவாக உள்ள நிலையில், கூடுதலான தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. அணையில் நேற்றைய நிலவரப்படி நீர் இருப்பு 4 ஆயிரத்து 506 மில்லியன் கன அடியாக இருந்தது.

Next Story