விவசாயிகளின் பயன்பாட்டிற்காக ஆத்துப்பாளையம் அணையில் தண்ணீர் திறப்பு அமைச்சர் கலந்து கொண்டார்


விவசாயிகளின் பயன்பாட்டிற்காக ஆத்துப்பாளையம் அணையில் தண்ணீர் திறப்பு அமைச்சர் கலந்து கொண்டார்
x
தினத்தந்தி 10 Nov 2019 11:00 PM GMT (Updated: 10 Nov 2019 7:22 PM GMT)

விவசாயிகளின் பயன்பாட்டிற்காக ஆத்துப்பாளையம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.

க.பரமத்தி,

கரூர் மாவட்டம், புகளுர் வட்டத்திற்குட்பட்ட அஞ்சூர்-கார்வழி ஊராட்சிக்கு இடையே ஆத்துப்பாளையம் அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் நொய்யல் ஆற்றில் கலக்கிறது. நொய்யல் ஆற்றில் வரும் உபரி நீரை திருப்பூர் மாவட்டம் சின்னமுத்தூர் என்னுமிடத்தில் மதகணை மூலம் திறக்கப்பட்டு முத்தூர் வழியாக ஆத்துப்பாளையம் அணைக்கு வருகிறது. தற்போது பரவலாக மழைபெய்து வருவதால் ஆத்துப்பாளையம் அணை, நீண்ட நாட்களுக்கு பிறகு முழுகொள்ளளவை எட்டியுள்ளது. ஆத்துப்பாளையம் அணை தண்ணீீரை விவசாயிகள் நலன் கருதி பாசனத்திற்காக வாய்க்காலில், 18 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். மாவட்ட கலெக்டர் அன்பழகன் முன்னிலை வகித்தார். சீறிப்பாய்ந்த தண்ணீரில் பூக்களை தூவி விவசாயிகள் வரவேற்றனர்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் கவிதா, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா, திருச்சி மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திருவிக, மாவட்ட கூட்டுறவு அச்சகத்தலைவர் மார்்க்கண்டேயன், க.பரமத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் தில்.செந்தில், தென்னிலை கூட்டுறவு சங்க தலைவர் சண்முகம், கோடந்தூர் கூட்டுறவு சங்க தலைவர் சேகர், இளைஞரணி நிர்வாகி வைஷ்ணவி பிரபு, நொய்யல் ஆற்றுப்பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகி கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

3 மாதத்திற்கு வழங்க முடியும்

பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாயிகளுக்காக அப்போதைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் 600 ஏக்கர் பரப்பளவில் ஆத்துப்பாளையம் அணை கட்டப்பட்டது. சமீபகாலமாக தொடர்ந்து பெய்த மழையின் காரணமாகவும், கீழ்பவானி மற்றும் சின்னமுத்தூர் ஆகிய அணைகளில் இருந்து உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டதன் காரணமாகவும், நொய்யல் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதாலும் 23 ஆண்டுகளுக்கு பின் இந்த அணை நிரம்பியுள்ளது.

1999-ம் ஆண்டு விவசாயி ஒருவர் மாசு அதிகமாக உள்ளதாக நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றார். அவரிடம் சமாதானம் பேசி வழக்கு வாபஸ் பெற்று தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு ஒருமுறை முறை வைத்து தண்ணீர் வழங்கினால் மூன்று மாதத்திற்கு வழங்க முடியும். இந்த அணையின் மொத்தகொள்ளளவு 234.32 மில்லியன் கன அடியாகும். இந்த முழுகொள்ளளவும் தற்போது நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

19,500 ஏக்கர் பாசன வசதி

தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி விவசாயிகளின் நலன் கருதி ஆத்துப்பாளையம் அணையில் மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்டத்தின் மூலமாகவும், புகளுர் காகித ஆலை நிதி ரூ.13 லட்சம் மூலமாகவும் முழுமையாக தூர் வாரப்பட்டுள்ளது. இதன் மூலம் அஞ்சூர், துக்காச்சி, கார்வழி, தென்னிலை, முன்னூர், அத்திப்பாளையம், குப்பபம், புன்னம், வேட்டமங்கலம், புஞ்சைபுகளுர், புஞ்சைத்தோட்டக்குறிச்சி, ஆத்தூர், புஞ்சை கடம்பன்குறிச்சி, மண்மங்கலம், குப்பிச்சிப்பாளையம், மின்னாம்பள்ளி, காதப்பாறை, பஞ்சமாதேவி என 18-க்கும் மேற்பட்ட கிராமங்களைச்சேர்ந்த சுமார் 19,500 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறும்.

மேலும் நொய்யல் ஆற்றில் கழிவு நீர் கலக்காமல் இருக்க சின்னமுத்தூர் முதல் ஒரத்துப்பாளையம் வரை ரூ.150 கோடி மதிப்பில் துணை கால்வாய் (பேபி கால்வாய்) அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. திரூப்பூர் சாயக் கழிவு இந்த அணைக்கு வராமல் பாதுகாக்கப்படும். மேலும் சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத்தொகை பெற்று தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ரூ.250 கோடியில் பணிகள்

குடிமராமத்துக்காலதிட்டத்தின் கீழ் அனைத்து கால்வாய்கல், குளம், குட்டைகள் தூர்வாரப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தில் புகளுர், வாங்கல், நெரூர் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு கடைமடை வரை தண்ணீர் செல்கிறது. அரவக்குறிச்சி மற்றும் பரமத்தி பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.250 கோடி மதிப்பில் பணிகள் தொடங்கப்பட உள்ளது. கரூர் மாவட்டத்தின் குடிநீர் தேவைக்கென்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து வழங்கி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story