கடற்கரையில் அலைமோதிய மக்கள் கூட்டம்


கடற்கரையில் அலைமோதிய மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 10 Nov 2019 10:45 PM GMT (Updated: 10 Nov 2019 9:47 PM GMT)

புதுச்சேரி கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

புதுச்சேரி,

புதுவை அரசு சுற்றுலாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதனால் வார இறுதி நாட்களில் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். புதுவையில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் நகர பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. புதுவை கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பழைய துறைமுகம் அருகேயும், தலைமை செயலகம் எதிரே செயற்கை மணல் பரப்பு பகுதிக்கும் சென்று கடலில் இறங்கி அலையில் கால்களை நனைத்து விளையாடி மகிழ்ந்தனர். பலர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

போக்குவரத்து நெரிசல்

இதே போல் சண்டே மார்க்கெட் நடைபெறும் காந்திவீதியிலும் மக்கள் கூட்டத்தை காணமுடிந்தது. அவர்கள் பேரம் பேசி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். புதுவை நகர பகுதிகளில் வெளிமாநில பதிவெண்கள் கொண்ட வாகனங்களை நேற்று அதிக அளவில் காண முடிந்தது. இதனால் நகரின் முக்கியமான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் போக்கு வரத்தை சரி செய்தனர்.

நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமிலும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து, பாரடைஸ் பீச்சுக்கு சென்று, அங்கு கடலில் குளித்து மகிழ்ந்தனர்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

புதுவைக்கு நேற்று சில வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தந்தனர். அவர்கள் புதுவையில் சைக்கிள் ரிக்‌ஷாவில் பயணம் செய்வதில் ஆர்வம் காட்டினார்கள். புதுவை கடற்கரை சாலை உள்பட பல்வேறு இடங்களுக்கு அவர்கள் சைக்கிள் ரிக்‌ஷாவில் சென்று சுற்றிப்பார்த்தனர்.

Next Story