பெண்ணை குத்திக்கொன்ற வழக்கில், கணவர் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை - தூத்துக்குடி மகிளா கோர்ட்டு தீர்ப்பு


பெண்ணை குத்திக்கொன்ற வழக்கில், கணவர் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை - தூத்துக்குடி மகிளா கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 11 Nov 2019 10:45 PM GMT (Updated: 11 Nov 2019 10:14 PM GMT)

பெண்ணை குத்திக்கொன்ற வழக்கில் கணவர் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வில்லிசேரி, நடுக்காலனியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் தங்கபாண்டி (வயது 35). இவருக்கும், தோனுகால் அருகே உள்ள செட்டிகுளத்தை சேர்ந்த கற்பகம் (32) என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணமானது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் தங்கபாண்டி தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என கூறி கற்பகத்தை கொடுமை செய்து வந்தார். மேலும் தனது மூத்த சகோதரியின் மகளை 2-வது திருமணம் செய்ய திட்டமிட்டார். இதனால் தங்கபாண்டி தனது அண்ணன் தங்கமாரிமுத்து (40), தங்கை லதாசெல்வி (32), அக்காள் சுப்புலட்சுமி (50) மற்றும் சுப்புலட்சுமியின் மகன் சரவணகுமார் (26) ஆகியோருடன் சேர்ந்து கற்பகத்தை துன்புறுத்தினார். மேலும் கற்பகத்தை பெற்றோர் வீட்டில் இருந்து ரூ.50 ஆயிரம் வாங்கி வரும்படி கூறி வீட்டை விட்டு வெளியே அனுப்பி உள்ளனர்.

சிறிது காலம் தனது தாய் வீட்டில் இருந்த கற்பகம் கடந்த 8-2-2015 அன்று மீண்டும் கணவர் தங்கபாண்டியுடன் சேர்ந்து வாழ அவரது வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் தங்கபாண்டி தன்னால் 2-வது திருமணம் செய்ய முடியாது என்பதை அறிந்த பின்னர், தங்கமாரிமுத்து, லதாசெல்வி, சுப்புலட்சுமி, சரவணகுமார் ஆகியோருடன் சேர்ந்து கற்பகத்தை தாக்கி கத்தியால் குத்திக் கொலை செய்தார்.

இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்கபாண்டி உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு தூத்துக்குடி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி குமார்சரவணன் விசாரித்தார். இதற்கிடையே, ஜாமீனில் வந்த சரவணகுமார் தற்போது வரையில் தலைமறைவாகவே இருந்து வருகிறார். இதனால் இந்த வழக்கில் அவரது பகுதி பிரிக்கப்பட்டுள்ளது. அவரை தவிர குற்றம் சாட்டப்பட்ட தங்கபாண்டி உள்பட 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.17 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி குமார்சரவணன் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக சுபாஷிணி ஆஜரானார்.

Next Story