டிசம்பர் 1-ந்தேதி முதல் பெரிய ஓட்டல், நிறுவனங்களின் குப்பைகளை மாநகராட்சி லாரிகள் எடுக்காது ஆணையர் பேட்டி


டிசம்பர் 1-ந்தேதி முதல் பெரிய ஓட்டல், நிறுவனங்களின் குப்பைகளை மாநகராட்சி லாரிகள் எடுக்காது ஆணையர் பேட்டி
x
தினத்தந்தி 12 Nov 2019 10:45 PM GMT (Updated: 12 Nov 2019 7:37 PM GMT)

வருகிற டிசம்பர் 1-ந்தேதி முதல் பெரிய ஓட்டல்கள், நிறுவனங்களின் குப்பைகளை மாநகராட்சி லாரிகள் எடுக்காது என்று மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் கூறினார்.

திருச்சி,

திருச்சி மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்று ஒரு வார காலம் தான் ஆகிறது. மாநகர பகுதியை தூய்மைப்படுத்தும் பணியை வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும் என்பதற்காக பள்ளிகளுக்கு சென்று மாணவர்கள் மத்தியில் பேசி வருகிறேன். மாணவர்களின் வீட்டுப்பாட நோட்டுகளில் குப்பைகளை பிரித்து வழங்க பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும், மரங்கள் வளர்க்க வேண்டும், பிளாஸ்டிக் பைகளை சாலையில் போடக்கூடாது என்று எழுதி உள்ளேன். மாநகராட்சி அதிகாரிகளும் இந்த பணிகளை செய்து வருகிறார்கள். இதுவரை சுமார் 50 ஆயிரம் மாணவர்களை இந்த விழிப்புணர்வு நடவடிக்கை சென்றடைந்து உள்ளது.

கோவில், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்கள் ஆகிய வழிபாட்டு தலங்களிலும் குப்பை சேகரிப்பு தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ரோட்டரி, லயன்ஸ் போன்ற சேவை நிறுவனங்களிடமும் மாநகரை தூய்மையாக வைத்துக்கொள்ள எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி பேசி வருகிறேன். மேலும் மாநகராட்சியின் வருவாயை பெருக்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

குப்பை சேகரிப்பில் மாற்றம்

திருச்சி மாநகராட்சி பகுதியில் தினமும் சுமார் 320 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த குப்பைகளில் சுமார் 30 சதவீதம் பெரிய ஓட்டல்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் பெரிய நிறுவனங்களிடம் இருந்து சேகரிக்கப்படுபவை ஆகும். வருகிற டிசம்பர் மாதம் 1-ந்தேதி முதல் இந்த குப்பைகளை எடுக்க லாரிகள் அனுப்பப்படாது. அந்த நிறுவனங்களை சேர்ந்தவர்களே அவர்களது வளாகத்தில் சேரும் குப்பைகளை சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உரமாக்கி கொள்ள வேண்டும். 100 கிலோவுக்கு மேல் குப்பை சேரும் நிறுவனங்களுக்கு இது பொருந்தும்.

வீடுகளில் தினமும்...

அதே நேரத்தில் டீக்கடைகள் உள்ளிட்ட சிறிய கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை மாநகராட்சியே சேகரித்து கொள்ளும். மாநகராட்சி பகுதியில் வசிக்கும் அனைத்து குடியிருப்புதாரர்களும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என இரண்டாக பிரித்து வழங்க வேண்டும். அதனை மாநகராட்சி பணியாளர்கள் தினமும் வீடு தேடி வந்து சேகரித்து செல்வார்கள். பெரிய நிறுவனங்களின் குப்பைகளை இதுவரை சேகரித்து வந்த துப்புரவு பணியாளர்களும் இனி குடியிருப்பு பகுதிகளுக்கு திருப்பி விடப்படுவார்கள்.

தினக்கூலி பணியாளர்

துப்புரவு பணியாளர்களுக்கு தினக்கூலி ரூ.360 வழங்கப்படுகிறது. இந்த வேலையை செய்ய இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்களை வேலைக்கு அமர்த்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநகராட்சி தயாராக உள்ளது. மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து சாக்கடை கால்வாய்களும் 10 நாட்களில் தூர்வாரப்படும். மூன்றாம் கட்ட பாதாள சாக்கடை திட்டப்பணி முடிவடைந்த பின்னர் தான் புதிதாக சாலைகள் அமைக்கப்படும். அதற்கு முன்பாக மோசமான நிலையில் உள்ள சாலைகள் தற்காலிகமாக சீரமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story