மொடக்குறிச்சி அருகே துணிகரம்: டீக்கடைக்காரர் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை-பணம் கொள்ளை


மொடக்குறிச்சி அருகே துணிகரம்: டீக்கடைக்காரர் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 14 Nov 2019 10:30 PM GMT (Updated: 14 Nov 2019 8:21 PM GMT)

மொடக்குறிச்சி அருகே டீக்கடைக்காரர் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மொடக்குறிச்சி,

மொடக்குறிச்சி அருகே உள்ள சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் வேலுமணி. இவர் ஏற்கனவே இறந்துவிட்டார். அவருடைய மனைவி செல்வி (வயது 47). இவர்களுக்கு மகே‌‌ஸ்வரன் (25). சதீ‌‌ஷ்குமார் (24). ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகி விட்டது. வீடு அருகே டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் கடந்த 12-ந் தேதி அன்று செல்வி வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் திண்டுக்கலில் உள்ள உறவினர் வீட்டுக்கு துக்க நிகழ்ச்சிக்காக சென்றுவிட்டார். அங்கிருந்து நேற்று காலை அனைவரும் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்தனர். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பீரோவும் திறந்து கிடந்தது. அதில் இருந்த துணிமணிகள், பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 19 பவுன் நகை மற்றும் ரூ.56 ஆயிரத்தை காணவில்லை. வீடு பூட்டி கிடந்ததை மர்மநபர்கள் நோட்டமிட்டு வந்துள்ளனர். இதை பயன்படுத்தி இரவு நேரத்தில் வந்து வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளார்கள். பின்னர் அங்கிருந்த பீரோவையும் உடைத்து திறந்துள்ளார்கள். அதில் இருந்த நகையையும், பணத்தையும் கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து செல்வி மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story