வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால் மாவட்டத்தின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு - ஆராய்ச்சி நிலையம் தகவல்


வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால் மாவட்டத்தின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு - ஆராய்ச்சி நிலையம் தகவல்
x
தினத்தந்தி 15 Nov 2019 10:30 PM GMT (Updated: 15 Nov 2019 6:13 PM GMT)

வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால் நாமக்கல் மாவட்டத்தின் சில இடங்களில் சிறு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்து உள்ளது.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இன்று முதல் 4 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 6 மி.மீட்டரும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) 2 மி.மீட்டரும், 19-ந் தேதி 2 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு இல்லை.

இன்று மணிக்கு 6 கி.மீ. வேகத்திலும், நாளை முதல் 3 நாட்களுக்கு மணிக்கு 4 கி.மீ. வேகத்திலும் கிழக்கு திசையில் இருந்து காற்று வீசும். வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக முறையே 89.6, 89.6, 91.4, 91.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக முறையே 75.2, 75.2, 73.4, 73.4 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 85 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 50 சதவீதமாகவும் இருக்கும்.

சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் அடுத்த 4 நாட்களுக்கு வடகிழக்கு பருவமழையின் லேசான தாக்கத்தால் நாமக்கல் மாவட்டத்தின் சில இடங்களில் சிறு மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த வாரம் இறந்த கோழிகள் பெரும்பாலும் குடற்புண் மற்றும் இறக்கை அழுகல் நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்தது கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்து உள்ளது. எனவே, பண்ணையாளர்கள் கோழிக்கு அளிக்கப்படும் தீவன மூலப்பொருட்களில் கிளாஸ்டிரிடியம் மற்றும் ஈகோலை கிருமியின் தாக்கம் உள்ளதா? என பரிசோதனை செய்து அதற்கு தகுந்தாற்போல் தீவன மேலாண்மை முறைகளை கையாள வேண்டும். மேலும், கோழி தீவனத்தில் புஞ்சை நச்சு தடுப்பு மருந்துகளை கலந்து உபயோகிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story