சீர்காழி அருகே, மோட்டார் சைக்கிள் திருட்டு; 2 பேர் கைது


சீர்காழி அருகே, மோட்டார் சைக்கிள் திருட்டு; 2 பேர் கைது
x
தினத்தந்தி 19 Nov 2019 9:45 PM GMT (Updated: 19 Nov 2019 2:02 PM GMT)

சீர்காழி அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சீர்காழி, 

நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் காந்தி நகரை சேர்ந்த ராமசாமி மகன் முல்லைமுருகன் (வயது 35). இவர், கடந்த 5–ந் தேதி இரவு தனது வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்து விட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை எழுந்துவந்து பார்த்தபோது வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் காணாமல்போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து முல்லைநாதன் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று சீர்காழி புறவழிச்சாலை கோவில்பத்து என்ற இடத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை பிடித்து சோதனை செய்ய முயற்சித்தனர். ஆனால் அதில் 2 பேர் தப்பி ஓடினர். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பிடிப்பட்டவர்கள் சீர்காழி ராதாநல்லூர் பெரியார் தெருவை சேர்ந்த சக்திவேல் மகன் குற்றாலீஸ்வரன் (21), சீர்காழி விளந்திடசமுத்திரம் சிவன்கோவில் தெருவை சேர்ந்த மனோகரன் மகன் பூர்ணசந்திரன் (24), தப்பி ஓடியவர்கள் சிதம்பரம் மீனவர் காலனி பகுதியை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் அரவிந்த், சீர்காழி ராதாநல்லூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கருணாநிதி மகன் கலைநிதி ஆகியோர் என்பதும், இவர்கள் முல்லைமுருகனின் மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றாலீஸ்வரன், பூர்ணசந்திரன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக அரவிந்த், கலைநிதி ஆகியோரை தேடி வருகின்றனர்.

Next Story