உத்தமபாளையத்தில் பொக்லைன் எந்திர டிரைவர் வெட்டிக்கொலை 2 பேர் கைது


உத்தமபாளையத்தில் பொக்லைன் எந்திர டிரைவர் வெட்டிக்கொலை 2 பேர் கைது
x
தினத்தந்தி 19 Nov 2019 10:45 PM GMT (Updated: 19 Nov 2019 6:29 PM GMT)

உத்தமபாளையத்தில் பொக்லைன் எந்திர டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

உத்தமபாளையம்,

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள உ.அம்பாசமுத்திரம் மேற்குதெருவை சேர்ந்தவர் லட்சுமணன். இவர், அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். அவருடைய மகன் ராஜேஷ் (வயது 29). பொக்லைன் எந்திர டிரைவர். இவருக்கு திருமணமாகி தீபா (25), என்ற மனைவியும், அஜிதாஸ்ரீ (3½), பிரித்திகாஸ்ரீ (10 மாதம்) என்ற 2 மகள்களும் உள்ளனர்.

நேற்று முன்தினம் காலையில் வேலைக்கு சென்ற ராஜேஷ் மதியம் வீடு திரும்பினார். பின்னர் 2 பெண் குழந்தைகளுக்கு அரசு வழங்கக்கூடிய உதவித்தொகை பெறுவது தொடர்பாக, உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்று வருவதாக கூறி வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவருடைய உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர்.

இந்தநிலையில் உத்தமபாளையம்-புதூர் இடையே நாடார் பங்களா களம் என்ற இடத்தில் ராஜேஷ் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவருடைய உடலின் பல்வேறு இடங்களில் அரிவாள் வெட்டு காயங்கள் இருந்தன. அவரை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸ் துணை சூப்பிரண்டு சின்னகண்ணு உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் உ.அம்பாசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த கனகராஜ் மகன் செல்வகுமார் (22) மற்றும் அதே ஊரை சேர்ந்த முருகன் மகன் பொம்மையசாமி (22) ஆகியோருடன் சேர்ந்து அந்த பகுதியில் ராஜேஷ் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர் களை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் உத்தமபாளையம் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் பழனியம்மாள் முன்பு செல்வகுமார், பொம்மையசாமி ஆகியோர் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள், உத்தமபாளையம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கைது செய்யப்பட்ட செல்வகுமாரும், பொம்மையசாமியும் நண்பர்களாக இருந்தாலும் ஒரு வகையில் உறவினர்கள் ஆவர். பொம்மையசாமியின் தங்கையை, அருகே உள்ள புலிகுத்தி என்ற ஊரில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து சொந்த ஊரான உ.அம்பாசமுத்திரத்தில் அவர் வசித்து வருகிறார்.

இவரைப்பற்றி, கொலையான ராஜேஷ் அசிங்கமாக பேசியதாக கூறப்படுகிறது. இது, பொம்மையசாமிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நாடார் பங்களா களத்துக்கு செல்வகுமார், பொம்மையசாமி ஆகியோர் மதுபானம் குடிக்க சென்றனர். அங்கு ராஜேசும் வந்தார்.

அப்போது, எனது தங்கையை பற்றி எதற்காக நீ அசிங்கமாக பேசி வருகிறாய்? எனக்கூறி ராஜேசிடம், பொம்மையசாமி தகராறில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்த கட்டையால் ராஜேசை தாக்கினார். இதைத்தொடர்ந்து பொம்மையசாமி, செல்வகுமார் ஆகியோர் சேர்ந்து அரிவாளால் வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே ராஜேஷ் பரிதாபமாக இறந்தார். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட ராஜேசின் மனைவி தீபாவுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவரது உறவினர்கள் உத்தமபாளையம் பைபாஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story