பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கும்போது அரசு விதிகளை பின்பற்ற வலியுறுத்தல்


பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கும்போது அரசு விதிகளை பின்பற்ற வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Nov 2019 10:45 PM GMT (Updated: 23 Nov 2019 7:47 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி களில் அரசு விதிகளை பின்பற்ற வேண்டும் என்று கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர்,

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 2 வயது சிறுவன் சுஜித் உயிரிழந்த சம்பவத்துக்கு பிறகு, தமிழக அரசு ஊராட்சிகளில் அமைக்கப்படும் அனைத்து விதமான திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், ஏற்கனவே உள்ள கிணறுகளை ஆழப்படுத்துவது மற்றும் புனரமைப்பு செய்வது தொடர்பாக பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் ஒழுங்குப்படுத்துதல் விதிகளின் கீழ் சில நிபந்தனைகளை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதிய கிணறு தோண்டுவது, ஆழ்துளை கிணறு அமைத்தல், ஏற்கனவே உள்ள கிணறுகளை ஆழப்படுத்துவது மற்றும் புனரமைப்பு செய்வது ஆகிய பணிகள் பதிவு பெற்ற நிறுவனங்கள் மூலமே மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கான கட்டணமாக ரூ.100-க்கான வங்கி வரைவோலையுடன் தொடர்புடைய தனி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (கிராம ஊராட்சி) விண்ணப்பம் அளிக்கப்பட வேண்டும். விண்ணப்பம் பெறப்பட்ட 30 நாட்களுக்குள் தனி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் பரிசீலனை செய்து அரசாணையில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளுடன் கிணறு அமைக்க அனுமதி வழங்கப்படும்.

ஆழப்படுத்துதல்-புனரமைக்கும் பணிகள்

மேலும் கிணற்றை ஆழப்படுத்தவும் மற்றும் புனரமைக்கவும் மேற்கொள்ளப்படும் வணிக ரீதியிலான பணியினை செய்வதற்கு தொடர்புடைய நிறுவனம் பதிவுச்சான்று பெற ரூ.15 ஆயிரத்திற்கான வங்கி வரைவோலையுடன் மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும். கலெக்டரால் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு 45 தினங்களுக்குள் நிபந்தனைகளுடன் பதிவுச்சான்று வழங்கப்படும். பணி தொடங்கும் முன் கிணற்றின் வகை, ஆழம் மற்றும் அகலம், பணி மேற்கொள்பவர் மற்றும் கிணற்றின் உரிமையாளர் பெயர், முகவரி மற்றும் தொடர்பு விவரங்களையும் பணி நடக்கும் இடத்தில், கவனத்தைக் கவரும் வகையில் அறிவிப்பு மூலம் தெரிவிக்கவேண்டும். கிணறு தொடர்பான பணி மேற்கொள்ளும் இடத்தை சுற்றிலும் முள் கம்பிவேலி அல்லது தகுந்த தடுப்பு அமைக்கப்படவேண்டும்.

பணி முடிவுற்ற பின் கிணற்றைச் சுற்றி உள்ள சகதிக்குழிகளும், கால்வாய்களும் நிரப்பி மூடப்படவேண்டும். கிணற்றின் மேற்புறத்தை எக்கு தகடுகளாலும், ஒன்றுடன் ஒன்றோடு இணைத்து பற்ற வைக்கப்பட்ட மூடியைக் கொண்டோ அல்லது இரும்புக்குழாயின் மேற்புறத்தை உறுதியான மூடியைக்கொண்டோ மூடி, திருகு மரையாணிகளைக்கொண்டு குழாயுடன் இணைத்து மூடவேண்டும். மேலும் ஆழ்குழாய் அமைப்பவர் கிணறு அமைக்க வழங்கப்பட்ட அனுமதியில் வரையறுக்கப்பட்டுள்ளவற்றிலிருந்து ஒருபோதும் விலகமாட்டேன், பணி மேற்கொள்ளப்படும் பகுதியில் தலையிட்டு அன்றாட நடவடிக்கைகளுக்கோ, போக்குவரத்துக்கோ எந்த விதத்திலும் இடையூறு விளைவிக்க மாட்டேன் எனவும், மேலும், கலெக்டரால் குறிப்பிடப்படும் பிற நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு பணிகள் மேற்கொள்வேன் என உறுதிமொழி சான்று அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story