அதிகப்படியான நேரத்தை ஒதுக்கி மாணவ-மாணவிகள் படிக்க வேண்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை


அதிகப்படியான நேரத்தை ஒதுக்கி மாணவ-மாணவிகள் படிக்க வேண்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
x
தினத்தந்தி 23 Nov 2019 10:30 PM GMT (Updated: 23 Nov 2019 8:06 PM GMT)

அதிகப்படியான நேரத்தை ஒதுக்கி மாணவ-மாணவிகள் படிக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் அறிவுரை கூறினார்.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித் தலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு தொடர்பாக பள்ளி மாணவர்களுக் கிடையே பேச்சு, பாட்டு, நாடகம் மற்றும் ஓவியப்போட்டிகள் நடந்தது. இதற்கு குளித்தலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

போக்குவரத்து விதிகளை கடைபிடித்தால் அது நம் உயிரை காக்கும். மாணவ, மாணவிகள் தங்களுக்கான உரிய வயது வந்த பின்னரே வாகனங்களை ஓட்டவேண்டும். செல்போன் பேசிக்கொண்டு வண்டி ஓட்டுவது, மூன்று பேர் ஒரே வண்டியில் செல்வது போன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. மோட்டார் சைக்கிளில் செல்லும் உங்களின் பெற்றோர்களை ஹெல்மெட் அணிந்து செல்லுமாறும், கார் ஓட்டும் போது சீட்பெல்ட் அணியவும் சொல்ல வேண்டும். போக்குவரத்து சட்டவிதிகளை மதிக்கவேண்டும்.

ஒதுக்க வேண்டும்

சமூகத்தில் பெண்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். எந்த ஒரு வி‌‌ஷயமாக இருந்தாலும் காவல்துறை நடவடிக்கை எடுக்கும். காவல்துறை என்பது பொதுமக்களுக்கான அமைப்பே ஆகும். ஆனால் பொதுவாக அது மாற்றி பார்க்கப்படுகிறது. மாணவ, மாணவிகள் தங்களின் பெற்றோரை மதித்து, ஆசிரியர் சொல்வதை கேட்டு ஒழுக்கத்துடன் இருக்கவேண்டும். அதிகப்படியான நேரத்தை ஒதுக்கி படிக்க வேண்டும். தேவையில்லாத நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் பார்க்கக்கூடாது. நீங்கள் நன்றாக படிப்பதோடு, புரிந்து படித்து வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவபாலன், தனியார் எரிவாயு ஏஜென்சி உரிமையாளர் வெங்கடேசன், தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் ரம்யா, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story