வாலாஜா அருகே அழுத குழந்தை துப்பட்டாவால் அமுக்கி கொலை தாய் கைது


வாலாஜா அருகே அழுத குழந்தை துப்பட்டாவால் அமுக்கி கொலை தாய் கைது
x
தினத்தந்தி 23 Nov 2019 11:30 PM GMT (Updated: 23 Nov 2019 10:21 PM GMT)

குழந்தையின்அழுகையை நிறுத்த முகத்தில் துப்பட்டாவால் தாயார் அமுக்கியபோது மூச்சுத்திணறி குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தாயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலாஜா,

வாலாஜாவில் உள்ள திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அம்மு என்ற பவித்ரா (வயது 22). இவருக்கும் கவுரிசங்கர் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களது மகள்கள் ரம்யா (8), மவுலிகா (1½). கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கணவரிடம் கோபித்துக்கொண்டு பவித்ரா தனது 2 மகள்களுடன் தனியாக திரவுபதியம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறார்.

ரம்யாவை அருகில் உள்ள பள்ளியில் அவர் சேர்த்துள்ளார். குடும்ப வறுமையை போக்க காஞ்சீபுரத்தில் உள்ள ஜவுளிக்கடையில் பவித்ரா வேலைக்கு சேர்ந்தார். ரம்யாவை பள்ளிக்கு அனுப்பியபின், மவுலிகாவை பக்கத்து வீட்டில் ஒப்படைத்து விட்டு தினமும் காஞ்சீபுரத்திற்கு வேலைக்கு சென்று விட்டு மாலையில் அவர் வீடு திரும்புவார். வீட்டு வேலைகளையும் செய்து விட்டு ஜவுளிக்கடைக்கும் சென்று வேலைபார்த்து வந்ததால் தினமும் அவர் களைப்புடன் திரும்புவார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து பவித்ரா வழக்கம்போல் வாலாஜா திரும்பினார். பின்னர் பக்கத்து வீட்டில் ஒப்படைத்த 2-வது மகள் மவுலிகாவை தூக்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தார். இரவில் அந்த குழந்தை திடீரென அழுதது. ஏற்கனவே களைப்பாக இருந்த பவித்ரா, குழந்தையின் அழுகையால் விரக்தியடைந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் அவர் அழுகையை நிறுத்த துப்பட்டாவால் குழந்தையின் முகத்தில் அமுக்கினார். அப்போது மவுலிகாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த பவித்ரா, குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். டாக்டர் பரிசோதித்தபோது மவுலிகா இறந்து விட்டதாக கூறினார். அவர் விசாரித்தபோது பவித்ரா, ‘‘மகள் மவுலிகா அழுதுகொண்டிருந்தாள். அதனை நிறுத்த முயன்றபோது மயக்கம் ஏற்பட்டது. அதனால் மருத்துவமனைக்கு கொண்டு வந்தேன்’’ என்றார். எனினும் பவித்ராவின் பேச்சில் சந்தேகம் எழுந்ததால் அது குறித்து வாலாஜா போலீசாருக்கு டாக்டர் தகவல் அளித்தார்.

இதனையடுத்து வாலாஜா போலீசார் விரைந்து வந்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். குழந்தையை பவித்ரா கொலை செய்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் பவித்ரா கூறுகையில், நான் வேண்டுமென்றே மவுலிகா முகத்தை துப்பட்டாவால் அமுக்கவில்லை. காலையில் வீட்டு வேலையை முடித்து விட்டு மற்றொரு மகள் ரம்யாவை பள்ளிக்கு அனுப்புகிறேன். அதன்பிறகு நான் காஞ்சீபுரத்துக்கு சென்று வேலைபார்த்து விட்டு திரும்புகிறேன். குழந்தை அடிக்கடி அழுததால் என்னால் ஓய்வு எடுக்க முடியாத நிலையில் எரிச்சல் ஏற்பட்டது. எனவே அழுகையை நிறுத்துவதற்காகத்தான் துப்பட்டாவால் முகத்தில் லேசாக அமுக்கினேன் என்றார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து பவித்ராவை கைது செய்தனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story