கோபி அருகே கொடிவேரி அணையில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு சுற்றுலா வந்தபோது பரிதாபம்


கோபி அருகே கொடிவேரி அணையில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு சுற்றுலா வந்தபோது பரிதாபம்
x
தினத்தந்தி 24 Nov 2019 10:30 PM GMT (Updated: 24 Nov 2019 9:39 PM GMT)

கோபி அருகே கொடிவேரி அணைக்கு சுற்றுலா வந்த 2 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

டி.என்.பாளையம்,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வண்ணார் பேட்ைடயை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. அவருைடய மகன் விக்னேஷ் (வயது 20). இவர் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் சுதீப் (15). இவர் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இவர்கள் 2 பேரும் அதே பகுதியை சேர்ந்தவர்களுடன் ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து அனைவரும் ஒரு காரில் நேற்று பகல் 11 மணி அளவில் கொடிவேரி அணைக்கு வந்தனர்.

தண்ணீரில் மூழ்கினர்

பின்னர் அவர்கள் அணை பகுதியை சுற்றி பார்த்தனர். அதைத்தொடர்ந்து விக்னேஷ், சுதீப் உள்பட 5 பேருக்கும் அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் குளிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 5 பேரும் அணையில் இறங்கி குளிக்க தொடங்கினர்.

இதில் விக்னேசும், சுதீப்பும் ஆழமான பகுதியில் சென்று குளித்துள்ளனர். அந்த இடத்தில் சுழல் அதிகமாக காணப்பட்டது. மேலும் அவர்களுக்கு நீச்சல் தெரியாது என்று கூறப்படுகிறது. இதனால் 2 பேரும் தண்ணீரில் மூழ்க தொடங்கினார்கள்.

பிணமாக மீட்பு

உடனே 2 பேரும், “காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்” என்று அபயக்குரல் எழுப்பினர்.

இதை பார்த்த உடன் குளித்து கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். 2 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி இழுத்து செல்லப்பட்டார்கள்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினர் அங்கு சென்று அணையில் இறங்கி 2 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டார்கள்.

சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு விக்னேசும், சுதீப்பும் அவர்கள் குளித்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் பிணமாக மீட்கப்பட்டனர். அவர்களது உடல்களை பார்த்து உடன் வந்தவர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

எச்சரிக்கை பலகை

உடல்களை கைப்பற்றிய பங்களாப்புதூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக தனியார் ஆம்புலன்சில் ஏற்றி சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சம்பவம் நடந்த இடத்தில், இது ஆழமான பகுதி. இங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு்ள்ளது. ஆனால் அதையும் மீறி விக்னேசும், சுதீப்பும் அங்கு குளிக்க சென்று மரணத்தை தேடிக்கொண்டனர். 8 நாட்களுக்கு பிறகு கொடிவேரி அணையில் குளிக்க நேற்று அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story