ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள் காங்கிரஸ் நிர்வாகியின் மாமனாரிடம் விசாரணை


ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள் காங்கிரஸ் நிர்வாகியின் மாமனாரிடம் விசாரணை
x
தினத்தந்தி 27 Nov 2019 11:15 PM GMT (Updated: 27 Nov 2019 7:17 PM GMT)

தரகம்பட்டி அருகே ஒரு ஏக்கரில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகியின் மாமனாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தரகம்பட்டி,

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே உள்ள மைலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜாகீர்உசேன்(வயது55). இவருக்கு சொந்தமாக மாமரத்துப்பட்டியில் 10 ஏக்கர் தோட்டம் உள்ளது. இவர் தனது தோட்டத்தினை கரூர் மாவட்டம், சின்னதேவன்பட்டியை சேர்ந்த கடவூர் வடக்கு வட்டார காங்கிரஸ் பொறுப்பாளர் அருணாச்சலம் என்பவருக்கு 2 வருடங்களாக குத்தகைக்கு விட்டுள்ளார்.

அருணாச்சலம் தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார். இதனால் இந்த தோட்டத்தை அருணாச்சலத்தின் மாமனார் பஞ்சப்பட்டியை சேர்ந்த தங்கவேல் (வயது 70) பராமரித்து வருகிறார். இவருக்கு உதவியாக தேனி மாவட்டம், வருசநாட்டை சேர்ந்த முருகன்(49) என்பவர் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் 2 பேரும் சேர்ந்து தோட்டத்தில் கஞ்சா செடிகள் பயிரிட்டுள்ளனர். இது தொடர்பாக திருச்சி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது.

இதையடுத்து நேற்று காலை திருச்சி போதைப்பொருள் தடுப்பு பிரிவு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு டோங்கரே தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், ராதாகிரு‌‌ஷ்ணன் ஆகியோர் தோட்டத்தில் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த தோட்டத்தில் தென்னை, மா மரங்கள் இருந்தன. சோளம், மல்லிகை பூக்களும் பயிரிடப்பட்டிருந்தன. இவற்றிற்கிடையில் சுமார் ஒரு ஏக்கரில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்ததையும் போலீசார் கண்டறிந்தனர்.இதையடுத்து திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, சிந்தாமணிப்பட்டி இன்ஸ்பெக்டர் முகமது இத்ரீஸ் மற்றும் போலீசார் குறிப்பிட்ட தோட்டத்திற்கு சென்று கஞ்சா செடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதையடுத்து தோட்டத்தை பராமரித்து வந்த தங்கவேல், முருகன் ஆகிய இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நன்றாக வளர்ந்து இருந்த கஞ்சா செடிகள் சுமார் 300 கிலோ எடை இருக்கும் என்றும், இதன் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து கஞ்சா செடிகளை ஆய்வு செய்த பின்னர் அவற்றை அழிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story