ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவது போல் பெண்ணிடம் ரூ.49 ஆயிரம் மோசடி செய்த வாலிபர்


ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவது போல் பெண்ணிடம் ரூ.49 ஆயிரம் மோசடி செய்த வாலிபர்
x
தினத்தந்தி 28 Nov 2019 10:30 PM GMT (Updated: 28 Nov 2019 7:34 PM GMT)

ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்து தருவது போல் பெண்ணிடம் ரூ.49 ஆயிரம் மோசடி செய்த வாலிபர் மீண்டும் அதே மையத்திற்கு வந்தபோது சிக்கினார்.

கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டினத்தை சேர்ந்தவர் ஜாவித்ரகுமான். இவரது மனைவி ஜம்ரத்நி‌ஷா (வயது 26). இவர் சம்பவத்தன்று தனது உறவினரின் மகனான ஒரு சிறுவனை அழைத்துக் கொண்டு மீமிசலில் உள்ள ஏ.டி.எம்.மிற்கு பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது ஏ.டி.எம். மையத்தில் வேறு ஒருநபர் பணம் எடுத்துக்கொண்டு இருந்ததால் ஜம்ரத் நி‌ஷா, வெளியில் நின்று கொண்டு சிறுவனிடம் ஏ.டி.எம்.கார்டை கொடுத்து பணம் எடுத்து வருமாறு கூறி உள்ளார். அந்த சிறுவன் அங்கு ஏற்கனவே பணம் எடுத்து கொண்டிருந்தவரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு கேட்க, அவர் பணத்தை எடுத்து கொடுத்து கார்டையும், சிறுவனிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் ஜம்ரத் நி‌ஷா செல்போன் நம்பருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ஏ.டி.எம்.மில் இருந்து ரூ.49 ஆயிரம் எடுத்ததாக வந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஜம்ரத் நி‌ஷா, சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று கேட்டுள்ளார். பின்னர் வங்கி அதிகாரிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது, ஜம்ரத் நி‌ஷா சிறுவனிடம் கொடுத்த ஏ.டி.எம். கார்டை மர்மநபர் வாங்கி கொண்டு, அவரது கார்டை சிறுவனிடம் கொடுத்துள்ளது தெரிந்தது. பின்னர் அந்த நபர் வேறு ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பணத்தை நூதன முறையில் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஜம்ரத் நி‌ஷா மீமிசல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

வாலிபர் கைது

இந்நிலையில் அந்த நபர் மீண்டும் அதே ஏ.டி.எம்.மையத்திற்கு பணம் எடுக்க வந்துள்ளார். இதனை மீமிசல் வங்கி மேலாளர் கண்காணிப்பு கேமராவில் பார்த்துள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் மீமிசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த நபரை பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டினம் பகுதியை சேர்ந்த செய்யது முகமது மகன் இப்ராகிம் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இப்ராகிமிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story