கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை குகைவழிப்பாதைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி


கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை குகைவழிப்பாதைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 1 Dec 2019 11:00 PM GMT (Updated: 1 Dec 2019 9:26 PM GMT)

கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குகைவழிப்பாதைகளில் தண்ணீர் தேங்கியதில் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

கரூர்,

அந்த வகையில் கரூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து நேற்று காலை முதல் மழை தூறிக் கொண்டே இருந்தது. இதனால் கரூர் பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் குடை பிடித்து கொண்டே சென்றதை காண முடிந்தது. இந்த மழையால் கரூர் பகுதிகளில் குண்டும், குழியுமான சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்பட்டது.

கரூர் வடிவேல் நகரில் உள்ள போலீஸ் குடியிருப்பு பகுதிகளில் சாலை தோண்டப்பட்டு மண்சாலையாக இருந்தது. மழைக்கு இந்த சாலை உருக்குலைந்து சேறும், சகதியுமாக மாறியதால் இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றில் குடியிருப்பு வளாகத்தில் செல்ல போலீசார் குடும்பத்தினர் சிரமப்பட்டனர்.

எனவே அங்கு தார்சாலை அமைத்து தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

குகைவழிப்பாதையில் தண்ணீர் தேங்கியது

இதே போல் பசுபதிபாளையம், பெரியகுளத்துப்பாளையம் குகைவழிப்பாதைகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றதால் வாகனங்கள் அதில் தத்தளித்தபடியே சென்றதை காண முடிந்தது. இந்த இடைவிடாத மழையிலும் கரூர் ரெயில் நிலையத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் குடிநீர் நிரப்பப்படாததால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். விலை கொடுத்து பாட்டில் குடிநீரை வாங்கி சென்றனர். மேலும் பருவமழைக்காலம் தொடங்கிவிட்டதால் கரூரில் உள்ள கடைகளில் மழையில் அணிந்து செல்வதற்கான கோட்டு, குடை விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. மேலும் கரூரில் கொசுவலை உற்பத்தியும் மும்முரமாக நடக்கிறது. ஜவகர்பஜார் உள்ளிட்ட இடங்களில் கொசுவலைகள் வீதியில் விற்பனை செய்யப்படுகின்றன.

குளித்தலை

குளித்தலை பகுதியில் நேற்று காலை முதல் அவ்வப்போது விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் குளித்தலை போலீஸ் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம் அரசு பெண்கள் பள்ளி ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. மழை சற்று குறைந்த பின்னர் படிப்படியாக தேங்கி நின்ற மழைநீர் வடிய தொடங்கியது. இதேபோல் குளித்தலை நகரப்பகுதியில் உள்ள காவேரி நகர், அண்ணா நகர் உள்பட பல தெருக்களில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து தேங்கி நின்றது. இதனால் தெருக்களில் நடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் குளித்தலை காவேரி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் சாலையோரம் தரைக்கடைகள் அமைத்து காய்கறிகளை விற்பனை செய்யும் வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பு பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.

மழையளவு விவரம்

கரூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

கரூர்-5, அரவக்குறிச்சி-35, அணைப்பாளையம்-5, க.பரமத்தி-6.8, குளித்தலை-7, தோகைமலை-4, கிரு‌‌ஷ்ணராயபுரம்-7.4, மாயனூர்-8, பஞ்சப்பட்டி-10.6, கடவூர்-24.6, பாலவிடுதி-25.1, மைலம்பட்டி-16, மொத்த மழையளவு-154.5, இதன் சராசரி-12.88 ஆகும். திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் நீர்மட்டம் 65.52 அடியாக உள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 818 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த அணையிலிருந்து கரூர் அமராவதி ஆற்றில் நீர்திறப்பு இல்லை. எனினும் கரூர் நகர் அமராவதி ஆற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதை காண முடிகிறது.


Next Story