உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதால் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் ரத்து


உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதால் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் ரத்து
x
தினத்தந்தி 2 Dec 2019 10:15 PM GMT (Updated: 2 Dec 2019 3:44 PM GMT)

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

சிப்காட் (ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முதல் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற இருந்தது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் காலை 9 மணி முதல் மனுக்களுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கலெக்டரிடம் மனுக்கள் அளிக்க பொதுமக்கள் மனுக்களுடன் பதிவு செய்யும் இடத்தில் வரிசையில் நின்றிருந்தனர். அப்போது உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான தகவல் கலெக்டருக்கு வந்ததை தொடர்ந்து மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக கலெக்டர் அலுவலகம் தரப்பில் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பொதுமக்கள் வழக்கம் போல எல்லா நாட்களிலும் கலெக்டர் அலுவலகத்தில் மனுக்களை அளிப்பது போல் மனுக்களை அளிக்கலாம் என அதிகாரிகள் கூறினர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த மனுக்களை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்‌ஷினியிடம் வழங்கினர்.

பா.ம.க. மாநில சட்ட பாதுகாப்பு குழு துணை செயலாளர் வக்கீல் ஜானகிராமன் கொடுத்த மனுவில், ராணிப்பேட்டை பெயர் வர காரணமாயிருந்த ராஜா தேசிங்கு, ராணிபாய் ஆகியோரின் நினைவுச்சின்னங்கள் முட்புதர்களால் சூழப்பட்டு சிதிலமடைந்துள்ளது. இவற்றை புதுப்பித்து சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

காஞ்சனகிரி அறக்கட்டளை நிர்வாக தர்மகர்த்தா நேதாஜி நடேசன் கொடுத்த மனுவில், காஞ்சனகிரி மலைகோவிலுக்கு லாலாப்பேட்டை வழியாக செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும். மேலும் இந்த கோவிலின் மலை அடிவாரம் வரை பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

ராணிப்பேட்டை சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பில் அதன் தலைவர் மணிவாசகம், செயலாளர் குசேலன் ஆகியோர் கொடுத்துள்ள மனுவில், ராணிப்பேட்டை பஜாரில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும், ராணிப்பேட்டை சீனிவாசன்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பைகளை கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். ஏற்கனவே கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.

வேலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வசீகரன் கொடுத்துள்ள மனுவில், ராணிப்பேட்டை பழைய பஸ் நிலையத்தில் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆற்காட்டை சேர்ந்த அசேன் பா‌ஷா என்பவர் விபத்தில் கால் இழந்த எனக்கு இலவசமாக மோட்டார் சைக்கிளை வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Next Story