சோமவாரத்தையொட்டி ரெத்தினகிரீஸ்வரர் கோவில் மலை அடிவாரத்தில் தேங்காய் உடைத்து பக்தர்கள் வழிபாடு


சோமவாரத்தையொட்டி ரெத்தினகிரீஸ்வரர் கோவில் மலை அடிவாரத்தில் தேங்காய் உடைத்து பக்தர்கள் வழிபாடு
x
தினத்தந்தி 2 Dec 2019 10:30 PM GMT (Updated: 2 Dec 2019 7:31 PM GMT)

சோமவாரத்தையொட்டி ரெத்தினகிரீஸ்வரர் கோவில் மலை அடிவாரத்தில் தேங்காய் உடைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

குளித்தலை,

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் பிரசித்தி பெற்ற ரெத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் ஒவ்வொரு திங்கட் கிழமையும் கார்த்திகை சோமவாரம் விழா நடைபெறுவது வழக்கம். 5 திங்கட்கிழமை களிலும் 5 சோமவாரவிழா நடைபெறும். புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு பொதுமக்கள் விரதம் இருப்பதுபோல், இந்த சோமவார தினத்தன்று சிவபெருமானை வேண்டி விரதம் இருந்து மலையேறி அவரை தரிசனம் செய்து வந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். இதன்காரணமாக இங்கு நடைபெறும் 5 சோமவார தினத்தன்றும் பல்வேறு ஊர்களில் மட்டுமல்லாமல் பல மாவட்டங்களில் வசிக்கும் இக்கோவில் குடிபாட்டுகாரர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சோமவார நாளில் இங்குவந்து மலைமேல் வீற்றிருக்கும் ரெத்தினகிரீஸ்வரரை வழிபட்டு செல்வார்கள்.

இதேபோல் இந்தாண்டு இக்கோவிலில் முதல் சோமவாரம் கடந்த நவம்பர் மாதம் 18-ந்தேதி தொடங்கியது. இந்தநிலையில் 3-வது சோமவாரவிழாவான நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் குளித்தலை பகுதியைச் சுற்றியுள்ள ஊர்களில் இருந்தும் திரளான பக்தர்கள், கோவிலுக்கு வந்து 1017 படிகள் கொண்ட இக்கோவிலின் மலை உச்சிக்குச்சென்று சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.

தேங்காய் உடைத்து வழிபாடு

இதில் பல பக்தர்கள் மலை அடிவாரத்தில் உள்ள பாறைகளில் தாங்கள் கொண்டு வந்த பூ, வாழைப்பழங்கள், மாவிளக்கு உள்பட பல பொருட்களை வைத்து தேங்காய் உடைத்து சுவாமியை வழிபட்டனர். பலர் தங்களது விளைநிலங்களில் பயிரிட்டு அறுவடை செய்த நெல், கடலை, மிளகாய் கம்பு, உள்பட பல பொருட்களை கொண்டு வந்து கோவில் படிக்கட்டுகள், மலையைசுற்றி கொட்டி வழிபட்டனர். சோமவாரத்தையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகாமாக இருந்ததால், குளித்தலை போலீசார் மற்றும் ஊர்க் காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story