காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலாக மழை: ஏரியின் கரை உடைந்து பாசன நீர் வீணாக வெளியேற்றம்


காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலாக மழை: ஏரியின் கரை உடைந்து பாசன நீர் வீணாக வெளியேற்றம்
x
தினத்தந்தி 2 Dec 2019 11:15 PM GMT (Updated: 2 Dec 2019 7:54 PM GMT)

காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் ஏரிகள் குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

காஞ்சீபுரம்,

ஏரியின் கரை உடைந்து 300 ஏக்கர் பாசன நீர் வெளியேறியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று பெய்த மழையால் காஞ்சீபுரம் ரங்கசாமிகுளம் மேட்டு தெரு, இரட்டை மண்டபம், ஓரிக்கை, பெரியகாஞ்சீபுரம் உள்பட பல்வேறு இடங்களில் மழை நீர் ரோட்டில் ஆறுபோல் ஓடியது. மேலும் இந்த மழையினால் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், கிணறுகளுக்கு நீர்வரத்து வருவதால் வேகமாக நிரம்பி வருகிறது.

மேலும், காஞ்சீபுரம் ஓ.பி.குளம் தெருவில் பிரசித்தி பெற்ற திருக்குளம் உள்ளது. இந்த குளத்தில் புகழ் பெற்ற காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பிரமோற்சவம் விழா காலத்தில் சாமி எழுந்தருளி காட்சி அளிப்பது வழக்கம். அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குளத்திற்கு வந்து வணங்கி செல்வர். இந்தநிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் குளம் வேகமாக நிரம்பி வருகிறது.

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் சுங்குவார் சத்திரம் அடுத்த மேல்மதுராமங்கலம் கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கூத்தவாக்கம் ஏரி உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து உபரிநீர் இந்த ஏரிக்கு வரத்தொடங்கியது. ஏரி நீர் கலங்கள் வழியாக தண்ணீர் வெளியேறி வந்தது. நேற்று நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் ஏரியின் கரை உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சீபுரம் மாவட்ட துணை ஆட்சியர் சரவணன் உடைத்த ஏரியை நேரில் சென்று பார்வையிட்டார். பொதுப்பணி துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் ஏரி உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

300 ஏக்கர் பாசன நீர் வீணாக வெளியேறி விட்டது என விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

அதேபோல், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சிறிய ஏரிகள், குளங்கள், குட்டைகள் ஆகியவற்றிற்கும் நீர் வந்து கொண்டிருக்கிறது. சுற்றுலா நகரமான காஞ்சீபுரத்திற்கு ஏராளமானோர் பல்வேறு ஊர்களிலிருந்து அரசு பஸ் மூலம் காஞ்சீபுரத்திற்கு வருகை தருகிறார்கள். ஏற்கனவே காஞ்சீபுரம் பஸ் நிலையம் குண்டும், குழியுமாக காட்சி அளித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது கனமழை பெய்ததன் காரணமாக பஸ் நிலையத்தின் உள்ளே செல்லும் சாலையில் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்து குண்டு குழியுமாக மழைநீர் தேங்கி காட்சியளிக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் இருந்த பெரிய புளியமரம் ஒன்று திடீரென காற்றில் முறிந்து சர்வீஸ் சாலை நடுவே விழுந்தது. இதனைப்பற்றி தகவல் அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இரு சக்கர வாகனங்கள் செல்லும் அளவிற்கு மட்டும் மரத்தின் கிளையை வெட்டி அகற்றினார்கள்.

மீதியுள்ள புளியமரம் அகற்றப்படாமல், ஜி.எஸ்.டி. சர்வீஸ் சாலையின் நடுவில் கிடக்கிறது. இதனால் சர்வீஸ் சாலையில் செல்ல முடியாமல் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.

சர்வீஸ் சாலை நடுவே கிடக்கும் புளிய மரத்தை அகற்ற அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story