விலை உயர்வு எதிரொலி: வெங்காயத்துக்கு விடை கொடுத்த ஓட்டல்கள் - வடபாவ் கடைகளில் வெங்காய பஜ்ஜி விற்பனை நிறுத்தம்


விலை உயர்வு எதிரொலி: வெங்காயத்துக்கு விடை கொடுத்த ஓட்டல்கள் - வடபாவ் கடைகளில் வெங்காய பஜ்ஜி விற்பனை நிறுத்தம்
x
தினத்தந்தி 3 Dec 2019 11:00 PM GMT (Updated: 3 Dec 2019 7:31 PM GMT)

விலை உயர்வால் வெங்காயத்துக்கு பதில் ஓட்டல்களில் முட்டை கோஸ் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வடபாவ் கடைகளில் வெங்காய பஜ்ஜி விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

மும்பை,

மும்பை உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில மாதங்களாக வெங்காய விலை உச்சத்தில் உள்ளது. மராட்டியம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்த பருவம் தவறிய மழையே இந்த விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது. மும்பையை பொறுத்தவரை விரைவில் அழுகும் தன்மை உள்ள ஈரமான 3-ம் தர வெங்காயம் கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. முதல் தர வெங்காயம் கிலோவுக்கு ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை ஆகிறது.

மும்பையில் 3 மடங்கிற்கு மேல் வெங்காய விலை உயர்ந்துள்ளது குடும்ப தலைவிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர்கள் வெங்காயத்தின் பயன்பாட்டை குறைத்து வருகின்றனர். இதேபோல ஓட்டல்கள், நடைபாதை சிற்றுண்டி கடைகளும் வெங்காயத்திற்கு தற்காலிகமாக விடை கொடுத்து உள்ளன.

குறிப்பாக மும்பையில் உள்ள பெரும்பாலான ஓட்டல்கள் வாடிக்கையாளர்களுக்கு வெங்காயத்திற்கு பதிலாக முட்டைகோஸ் மற்றும் வெள்ளரி, தக்காளி சேலடை பரிமாறுகின்றன. பல பிரபல ஓட்டல்களில் கூட வெங்காயம் பரிமாறப்படாது என அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. பாவ் பாஜி, மிசல், உசல் பாவ் போன்ற உணவுப்பொருட்கள் மேல் கூட தற்போது வெங்காயம் தூவி கொடுப்பதை ஒட்டல் நிர்வாகங்கள் நிறுத்தி உள்ளன.

இது குறித்து மும்பை ஓட்டல் மற்றும் பார் சங்க தலைவர் சந்தோஷ் ஷெட்டி கூறுகையில், ‘‘மும்பையில் உள்ள பெரும்பாலான ஓட்டல்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வெங்காயம் கொடுப்பதை நிறுத்திவிட்டன. மேலும் சில ஓட்டல்கள் வெங்காயம் அதிகம் சேர்த்து செய்யப்படும் குழம்பு வகைகளின் (கிரேவி) விலையை உயர்த்தி உள்ளன’’ என்றார்.

இதேபோல சாலையோர ‘வட பாவ்’ கடைக்காரர்களும் வெங்காய பஜ்ஜி விற்பனையை முற்றிலுமாக நிறுத்தி உள்ளனர்.

இது குறித்து தாதரில் வடபாவ் கடை நடத்தி வரும் வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘‘கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த வெங்காயம் தற்போது ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலைக்கு வெங்காயத்தை வாங்கி பஜ்ஜி செய்துவிற்றால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படும். எனவே வெங்காய பஜ்ஜி விற்பனையை தற்காலிகமாக நிறுத்தி உள்ளோம். விலை குறைந்த பிறகு தான் இனிமேல் வெங்காய பஜ்ஜியை விற்பனை செய்ய முடியும்’’ என்றார்.

வெங்காய விலை உயர்வு குறித்து வாஷி மார்க்கெட்டை சேர்ந்த மொத்த வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

புதிதாக பயிரிடப்பட்ட வெங்காயம் டிசம்பர் மாதத்திற்கு பிறகு சந்தைக்கு வர வாய்ப்பு இருக்கிறது. எனவே ஜனவரி மாதத்தில் வெங்காயம் விலை குறைய வாய்ப்பு உள்ளது. அதுவரை வெங்காயத்தின் விலை அதிகமாகவே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story