குற்றாலத்தில், போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம்


குற்றாலத்தில், போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 3 Dec 2019 10:30 PM GMT (Updated: 3 Dec 2019 8:28 PM GMT)

குற்றாலம் போலீஸ் நிலையத்தை நன்னகரம் கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஊர் நாட்டாண்மை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகேயுள்ளது நன்னகரம் கிராமம். இங்கு ஊர் நாட்டாண்மையாக இருப்பவர் முருகன். இந்த கிராமத்தில் ஊர் சமுதாயத்திற்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில் வணிக வளாகம் கட்ட சமுதாய கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.

இதற்கு நிலத்தில் சிறிதளவு விற்று விட்டு, அதில் கிடைக்கும் நிதியை கொண்டு வணிக வளாகம் கட்ட ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அந்த இடத்தில் 3 சென்ட் இடத்தை ஒருவருக்கு நாட்டாண்மை முருகன் விற்று விட்டாராம். இது குறித்து அவர் சமுதாய மக்களிடம் தகவல் தெரிவிக்கவில்லையாம்.

இதனால் நாட்டாண்மைக்கும், பொதுமக்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதை தொடர்ந்து நேற்று நாட்டாண்மை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நன்னகரம் கிராம மக்கள் திரண்டு சென்று குற்றாலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 500-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் திரண்டு இந்த போராட்டத்தில் பங்கேற்றதால், பெரும் பரபரப்பு நிலவியது.

தகவல் அறிந்த தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல், குற்றாலம் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பிரச்சினை குறித்து ஊர்கூட்டம் நடத்தி முடிவு எடுக்குமாறும், இந்த கூட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுப்பதாகவும் போலீசார் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story