சுங்கான்கடையில் தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு மணல் மூடைகளை அடுக்கி சீரமைப்பு பணி தீவிரம்


சுங்கான்கடையில் தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு மணல் மூடைகளை அடுக்கி சீரமைப்பு பணி தீவிரம்
x
தினத்தந்தி 5 Dec 2019 11:00 PM GMT (Updated: 5 Dec 2019 9:49 PM GMT)

நாகர்கோவில், திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கான்கடையில் சாலையோரம் மண் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து மணல் மூடைகளை அடுக்கி சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

அழகியமண்டபம்,

நாகர்கோவில்- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கான்கடை அருகே அக்கிணம் குளம் உள்ளது. இங்கு சாலையோரம் குளத்தின் கரையில் அடிக்கடி மண்ணரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், சாலையின் அகலம் குறைந்து, சேதமடைந்து வருகிறது. அத்துடன், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை மாலை நேரங்களில் ஏற்படும் போக்கு வரத்து நெரிசலால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் அவதியடைந்து வருகிறார்கள்.

தற்போது, கடந்த சில தினங்களாக பெய்து வரும் பருவ மழையால் சுங்கான்கடையில் குளத்தின் கரையோரம் மண் சரிந்து விழுந்தது. மேலும், சாலையில் பிளவு ஏற்பட்டு பள்ளங்களாக மாறின. இதனால், அந்த பகுதியில் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

மணல் மூடைகள்

இதுகுறித்து தகவல் அறிந்த தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தினர். தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் மணல் மூடைகளை அடுக்கி தற்காலிகமாக சீரமைப்பு பணிகள் செய்து வருகிறார்கள்.

இந்த சாலையில் அடிக்கடி மழைக்காலங்களில் மண் சரிந்து சாலை சேதமடைவதால் நிரந்தர தீர்வு காணும் வகையில் வலுவான தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story