பயிர் காப்பீட்டிற்கான இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி 18-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்


பயிர் காப்பீட்டிற்கான இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி 18-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Dec 2019 10:45 PM GMT (Updated: 7 Dec 2019 7:09 PM GMT)

பயிர் காப்பீட்டிற்கான இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி 18-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

திருவாரூர்,

திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்டக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மாசிலாமணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

தீர்மானங்கள்

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தேசியக்குழு கூட்டத்தில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) முதல் 13-ந் தேதி வரை நாடு தழுவிய பிரசாரம் செய்வது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையின்படி 50 சதவீதம் சேர்த்து விலை நிர்ணயம் செய்திட வேண்டும்.

நிலுவையில் உள்ள பயிர் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்திட வேண்டும். முதியோர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் பென்சன் வழங்கிட வேண்டும். மாநில அரசு அமல்படுத்தியுள்ள ஒப்பந்த பண்ணை சட்டத்தை கைவிட வேண்டும். 2018-2019-ம் ஆண்டு பயிர் காப்பீட்டிற்கான இழப்பீட்டு தொகையினை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் பிரசாரம் செய்வது.

மேலும் 2018-2019-ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டிற்கான இழப்பீட்டு தொகை விடுபட்டுள்ள கிராமங்களுக்கும் வழங்கிட வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வரும் 18-ந் தேதி (புதன் கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ராவணன், மாவட்ட துணை செயலாளர்கள் ஜோசப், சவுந்தராஜன், மாவட்ட துணை தலைவர் நாகராஜன் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜெயபால், தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story