கும்பகோணத்தில் கிராம நிர்வாக அலுவலகங்களில் தீவிபத்து முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பல்


கும்பகோணத்தில் கிராம நிர்வாக அலுவலகங்களில் தீவிபத்து முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பல்
x
தினத்தந்தி 7 Dec 2019 10:45 PM GMT (Updated: 7 Dec 2019 7:33 PM GMT)

கும்பகோணத்தில் கிராம நிர்வாக அலுவலகங்களில் ஏற்பட்ட தீவிபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாகின.

கும்பகோணம்,

கும்பகோணத்தை அடுத்த கொட்டையூர் மெயின் ரோட்டில் கீழ கொட்டையூர் மற்றும் நாகக்குடி கிராமங்களுக்கான கிராம நிர்வாக அலுவலகங்கள் ஒரே கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. கீழகொட்டையூர் கிராம நிர்வாக அலுவலராக அசாருதீன், நாகக்குடி கிராம நிர்வாக அலுவலராக பாலமுரளி ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் நேற்றுமுன்தினம் மாலை பணிகளை முடித்து விட்டு அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றனர்.

இந்தநிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் கிராம நிர்வாக அலுவலகங்களில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர்களுக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிராம நிர்வாக அலுவலர்கள் பொதுமக்கள் உதவியுடன் போராடி தீயை அணைத்தனர்.

முக்கிய ஆவணங்கள்

இதில் 2 கிராம நிர்வாக அலுவலகங்களில் இருந்த சிட்டா, அடங்கல், வரைபடம், பதிவேடுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story