சிவகாசி-எஸ்.என்.புரம் ரோடு ரெயில்வே கேட் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் - மாற்று ஏற்பாடு செய்ய கோரிக்கை


சிவகாசி-எஸ்.என்.புரம் ரோடு ரெயில்வே கேட் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் - மாற்று ஏற்பாடு செய்ய கோரிக்கை
x
தினத்தந்தி 7 Dec 2019 10:15 PM GMT (Updated: 7 Dec 2019 7:57 PM GMT)

சிவகாசியில் இருந்து எஸ்.என்.புரம் செல்லும் ரோட்டில் உள்ள ரெயில்வே கேட் மூடப்படும்போது அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சிவகாசி, 

சிவகாசி ரெயில் நிலையத்தையொட்டி சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோடு, சிவகாசி-எஸ்.என்.புரம் ரோடு ஆகியவை உள்ளது. இந்த 2 ரோடுகளிலும் தற்போது அதிக அளவில் வாகன போக்குவரத்து இருந்து வருகிறது. இந்த பாதையில் அமைக்கப்பட்டுள்ள ரெயில்வே கேட்டை தினமும் 8 ரெயில்கள் கடந்த செல்கின்றன. இதை தவிர்த்து வாராந்திர ரெயில்களும் சென்று வருகிறது. ரெயில் வரும் நேரங்களில் இந்த ரெயில்வே கேட்களும் மூடப்படுகிறது. அவ்வாறு மூடப்படும் போது இந்த சாலையில் அதிக அளவில் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இப்படி காத்திருக்கும் போது எதிர், எதிர் திசைகளில் உள்ள வாகனங்கள் ரெயில்வே கேட்டை கடந்து செல்வதில் ஆர்வம் காட்டுவதால் வாகன நெரிசல்கள் ஏற்படுகிறது. சாதாரணமாக இந்த சாலைகளை கடந்து செல்ல சுமார் அரை மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை ஆகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும், பணிக்கு செல்லும் ஊழியர்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.

எனவே இந்த இரண்டு சாலைகளில் உள்ள ரெயில்வே கேட்டுகளை ரெயில்கள் கடக்கும்போது அங்கு உரிய போலீசாரை நிறுத்தி வாகன நெரிசல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ரெயில் கடந்து செல்லும் நேரங்களில் ஆம்புலன்சுகள் சென்றால் கூட காத்திருந்து கடந்து செல்ல வேண்டிய நிலை தொடர்கிறது.

இதுபோன்ற பிரச்சினைகள் இனி வரும் காலங்களில் ஏற்படாமல் இருக்க இந்த 2 ரெயில்வே கேட்களிலும் போலீசாரை நிறுத்தி உரிய மாற்று பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மாவட்ட போலீஸ் நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story