பிரதமரின் ஆலோசனைப்படி கிரண்பெடி செயல்படுகிறார் நாராயணசாமி குற்றச்சாட்டு


பிரதமரின் ஆலோசனைப்படி கிரண்பெடி செயல்படுகிறார் நாராயணசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 7 Dec 2019 11:15 PM GMT (Updated: 7 Dec 2019 9:52 PM GMT)

மாநில நலனுக்கு குந்தகம் விளைவிப்பதையே வேலையாக கொண்டு பிரதமரின் ஆலோசனைப்படி கிரண்பெடி செயல்படுகிறார் என நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.

புதுச்சேரி,

அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் சார்பில் புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று மாலை மாநில மாநாடு நடைபெற்றது. கழக தலைவர் லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநாட்டை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். அமைச்சர் கந்தசாமி வாழ்த்திப் பேசினார்.

நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளில் தனது சுயவிளம்பரத்திற்காக அதிக நேரத்தை செலவிடுகிறார். அவர், நாட்டு் மக்களை பற்றியோ, பொருளாதாரம் குறித்தோ கவலைப்படவில்லை.

காங்கிரஸ் காலத்தில் 9 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி தற்போது 4.5 சதவீதமாக குறைந்துவிட்டது. இதனை சரி செய்யாமல் ராமர் கோவில் கட்ட ஆர்வம் காட்டுகிறார்கள்.

தினமும் ஜனநாயக படுகொலை

தனி மனித சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் இல்லை. காஷ்மீர் மக்களின் சுதந்திரத்தை பறித்துள்ளனர். மத்திய அரசு நாட்டில் மத கலவரத்தை உருவாக்க முயற்சிக்கிறது. புதுச்சேரியில் தினமும் ஜனநாயக படுகொலை நடந்து வருகிறது. இங்கு அபூர்வமான கவர்னர் உள்ளார். மாநில நலனுக்கு குந்தகம் விளைவிப்பதே அவருடைய வேலை. இல்லாத அதிகாரத்தை தனக்கு தான் இருப்பதாக கூறி வருகிறார். கூட்டம் போடுவது, அதிகாரிகளை அழைத்து பேசுவது என போட்டி அரசாங்கம் நடத்துகிறார். பிரதமர் மோடி, அமித்ஷாவின் ஆலோசனைப்படி கிரண்பெடி செயல்படுகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story