திருப்பூரில் மணல் லாரி மோதி வாலிபர் பலி


திருப்பூரில் மணல் லாரி மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 7 Dec 2019 10:45 PM GMT (Updated: 7 Dec 2019 10:30 PM GMT)

திருப்பூரில் மணல் லாரி மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பலியானார். அவர் ஹெல்மெட்டை அணியாமல் மோட்டார் சைக்கிளின் முன்புறம் வைத்தபடி சென்றதால் இந்த சோக முடிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர்,

தஞ்சாவூரை சேர்ந்த ராஜசேகர் என்பவரின் மகன் சந்தோஷ் (வயது 30). இவர் திருப்பூர் கோல்டன் நகர் பகுதியில் தங்கியிருந்து பனியன் பிரிண்டிங் பட்டறையில் டிரைவராக வேலை செய்து வந்தார்.

நேற்று காலை சந்தோஷ் தனது மோட்டார் சைக்கிளில் யூனியன் மில் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் மணல் லோடுடன் லாரி ஒன்று வந்தது.

சங்கீதா தியேட்டர் அருகே சென்றபோது சந்தோசின் மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறிய சந்தோஷ் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சந்தோசின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். சந்தோஷ் தனது ஹெல்மெட்டை அணியாமல் மோட்டார் சைக்கிளின் முன்புறம் வைத்த படி சென்றதால் லாரி சக்கரத்தில் சிக்கி பலியானதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக லாரி டிரைவர் பழனிசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

Next Story