நாகர்கோவிலில் கடைகளுக்குள் புகுந்த அரசு பஸ் டிரைவர் உள்பட 5 பேர் படுகாயம்


நாகர்கோவிலில் கடைகளுக்குள் புகுந்த அரசு பஸ் டிரைவர் உள்பட 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 8 Dec 2019 11:00 PM GMT (Updated: 8 Dec 2019 8:16 PM GMT)

நாகர்கோவிலில் அரசு பஸ் கடைகளுக்குள் புகுந்து டிரைவர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

நாகர்கோவில்,

திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று அதிகாலை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பஸ் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. பஸ்சில் சில பயணிகள் இருந்தனர். அந்த பஸ் அதிகாலை 5 மணியளவில் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழே வந்து கொண்டிருந்தது.

அப்போது, அந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் தூண் மீது ேமாதியது. உடனே டிரைவர் பஸ்சை மறுபுறமாக திருப்பியபோது சாலையோரம் இருந்த இரண்டு கடைகளுக்குள் புகுந்தது. இதில் அந்த கடைகளின் முன்பகுதி சேதம் அடைந்தன. இதனால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் சத்தம்போட்டு அலறினர்.

5 பேர் படுகாயம்

இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி மற்றும் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தன. இதில் பஸ் டிரைவரான குழித்துறை மடத்துவிளையைச் சேர்ந்த ரசல்ராஜ் (வயது 45), மணலி அருகே மருதவிளையைச் சேர்ந்த கண்டக்டர் தவசி (46), பயணிகள் தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சேர்ந்த பலவேசம் (48), பாறசாலை பெரியவிளை புத்தன்வீடு பகுதியைச் சேர்ந்த சசி (62), முப்பந்தல் கண்ணன்பதி பகுதியைச் சேர்ந்த அருந்ததி (65) ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story