தண்டவாளத்தில் ஆண் உடல் மீட்கப்பட்ட வழக்கில் திருப்பம்: அண்ணனை கொன்ற பெண், உறவினருடன் கைது


தண்டவாளத்தில் ஆண் உடல் மீட்கப்பட்ட வழக்கில் திருப்பம்: அண்ணனை கொன்ற பெண், உறவினருடன் கைது
x
தினத்தந்தி 8 Dec 2019 10:30 PM GMT (Updated: 8 Dec 2019 10:19 PM GMT)

தண்டவாளத்தில் ஆண் உடல் மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக அவரது தங்கையை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

தண்டவாளத்தில் ஆண் உடல் மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக அவரது தங்கையை போலீசார் கைது செய்தனர். அவர் உறவினருடன் சேர்ந்து அண்ணனை கொலை செய்து உடலை அங்கு வீசியது தெரியவந்தது.

உடல் மீட்பு

மும்பை செம்பூர் பிம்வாடி பகுதியில் சரக்கு ரெயில்கள் செல்லும் தண்டவாள பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் உடல் ஒன்று மீட்கப்பட்டது. இதையடுத்து போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து கொலையாளி யார் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

முதற்கட்ட விசாரணையில் பிணமாக மீட்கப்பட்டவர் செம்பூர் பகுதியை சேர்ந்த தேவேந்திரா என்பதும், தேவேந்திராவை அவரது தங்கை ரேஷ்மா (வயது 29), உறவினர் சுமித் என்பவருடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்த அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது.

தங்கை, உறவினர் கைது

இதையடுத்து போலீசார் ரேஷ்மா மற்றும் அவரது உறவினர் சுமித்தை அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில், மதுபோதைக்கு அடிமையான தேவேந்திரா எந்த வேலைக்கும் செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து குடும்பத்தினரை அடித்து சித்ரவதை செய்து உள்ளார்.

இதனால் விரக்தி அடைந்த ரேஷ்மா, சம்பவத்தன்று குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்ட அண்ணன் தேவேந்திராவை உறவினர் சுமித் உதவியுடன் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் 2 பேரும் அவரது உடலை தண்டவாள பகுதியில் வீசியது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story