அகில இந்திய செயலாளர் முன்னிலையில் திருச்சியில் இளைஞர் காங்கிரசார் அடிதடி-மோதல்


அகில இந்திய செயலாளர் முன்னிலையில் திருச்சியில் இளைஞர் காங்கிரசார் அடிதடி-மோதல்
x
தினத்தந்தி 9 Dec 2019 11:15 PM GMT (Updated: 9 Dec 2019 4:48 PM GMT)

திருச்சியில் அகில இந்திய செயலாளர் முன்னிலையில் இளைஞர் காங்கிரசார் அடிதடி, மோதலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாசல மன்றத்தில் நேற்று மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ‘விழுதுகளை நோக்கி’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் அசன் மவுலானா தலைமை தாங்கினார். இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான ஜெமி மேத்தா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாநில துணை தலைவர்கள் விச்சு என்கிற லெனின் பிரசாத், பாக்கியராஜ், ஒருங்கிணைப்பாளர்கள் ரத்தீஸ், சையது ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது மாநகர் மாவட்ட தலைவர் பிரேம், செயல் தலைவர் ரமேஷ் சந்திரன் என மாவட்ட நிர்வாகிகளின் பெயர்கள் வாசிக்கப்பட்டது.

யார் தலைவர்?

அப்போது ரமேஷ் சந்திரன், நான் மாநகர் மாவட்ட தலைவராக அறிவிக்கப்பட்டு 6 மாதங்கள் ஆகிவிட்டது. தலைவராக நான் பொறுப்பேற்ற பின்னர் நான்கைந்து கூட்டங்களையும் நடத்தி முடித்து விட்டேன். பிரேமின் செயல்பாடுகள் சரி இ்ல்லை என கூறி அவரை பதவியில் இருந்து எடுத்து விட்டார்கள். இந்த சூழலில் பிரேமை எப்படி தலைவர் என்றும் என்னை செயல் தலைவர் என்றும் கூறலாம்? என மாநில தலைவர் அசன் மவுலானாவிடம் கேட்டார்.

இதனை கேட்டு பிரேம் ஆவேசம் அடைந்தார். எனது செயல்பாடுகளை சரி இல்லை என்று யார் சொன்னது? என் மீது என்ன குறை கண்டுபிடித்தார்கள் என்றார். அவருக்கு ஆதரவாக ஜி.எம்.ஜி. மகேந்திரன் உள்ளிட்டவர்கள் குரல் கொடுத்தனர். அதேநேரத்தில் ரமேஷ் சந்திரனுக்கு ஆதரவாக இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் அல்லூர் சுரேஷ் உள்ளிட்டவர்கள் மேடைக்கு வந்து மாநில தலைவரை சூழ்ந்து கொண்டு கேள்வி மேல் கேள்வி கேட்டனர்.

அடிதடி-மோதல்

ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு அடிதடியில் இறங்கினார்கள். அகில இ்ந்திய செயலாளர் ஜெமி மேத்தா முன்னிலையில் நடந்த இந்த மோதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது ெஜமிமேத்தா இருதரப்பினரையும் தனித்தனியாக விலக்கி விட்டார்.

இதனை தொடர்ந்து ஜெமி மேத்தா பேசுகையில் ‘பிரதமர் பதவியே எனக்கு வேண்டாம் என விட்டுக்கொடுத்த அகில இந்திய தலைவர் ேசானியாகாந்தி பிறந்த நாளிலா பதவிக்காக இப்படி மோதிக்கொள்வது? அமைதிக்கு பெயர் போன தமிழகத்தில் நடந்த இந்த சம்பவத்தை பார்க்க எனக்கு வேதனையாக இருக்கிறது. எல்லா கட்சியிலும் கோஷ்டிபூசல், கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். அதனை இப்படியா மோதி தீர்த்துக்கொள்வது? நமது பொது எதிரி பாரதீய ஜனதா தான். அவர்களுக்கு எதிராக உங்கள் வேகத்தை காட்டுங்கள். கட்சிக்குள் காட்டாதீர்கள்’ என்றார்.

கேக் வெட்டினார்

பின்னர் மோதலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்யும் வகையில் ‘கேக்’ கொண்டு வர சொல்லி அதனை வெட்டி இரு தரப்பினருக்கும் வழங்கினார்.

மாநகர் மாவட்ட தலைவர் பதவி தொடர்பான பிரச்சினையை தீர்க்க ஒரு குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்தார். இதனை தொடர்ந்து திருச்சி தெற்கு, வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

Next Story