சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வெங்காய மாலை அணிந்து வந்த வாலிபர்களால் பரபரப்பு - விலையை கட்டுப்படுத்தக்கோரி மனு


சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வெங்காய மாலை அணிந்து வந்த வாலிபர்களால் பரபரப்பு - விலையை கட்டுப்படுத்தக்கோரி மனு
x
தினத்தந்தி 9 Dec 2019 10:15 PM GMT (Updated: 9 Dec 2019 6:32 PM GMT)

வெங்காய விலையை கட்டுப்படுத்தக்கோரி அதை மாலையாக அணிந்து சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த வாலிபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் இதுதொடர்பாக அங்கிருந்த பெட்டியில் மனு போட்டனர்.

சேலம், 

உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதால் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவில்லை. இதனால் கோரிக்கை மனு அளிக்க வந்த பொதுமக்கள் அதனை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பெட்டிக்குள் போட்டுவிட்டு சென்றனர்.

இந்தநிலையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சேலம் தாதகாப்பட்டி கிளை தலைவர் சங்கர், செயலாளர் பார்த்திபன் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்துக்கு வெங்காயத்தை மாலையாக கட்டி அதை கழுத்தில் அணிந்து வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வெங்காய மாலையை கழற்ற செய்தனர். இதையடுத்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் இருந்த பெட்டியில் மனு போட்டனர்.இதுகுறித்து அவர்கள் கூறும் போது, ‘வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் விலையை கட்டுப்படுத்த அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் ரேஷன் கடை, கூட்டுறவு விற்பனை அங்காடிகளில் குறைந்த விலையில் வெங்காயத்தை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்’ என்றனர்.

Next Story