அரக்கோணம் அருகே, குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்று தாய் தற்கொலை


அரக்கோணம் அருகே, குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்று தாய் தற்கொலை
x
தினத்தந்தி 9 Dec 2019 10:45 PM GMT (Updated: 9 Dec 2019 8:53 PM GMT)

அரக்கோணம் அருகே குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்று, தாய் தற்கொலை செய்து கொண்டார்.

அரக்கோணம், 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள மோசூர் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 32). இவர் பெரம்பூரில் அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ரம்யா (24). இவர்களுக்கு திருமணம் நடந்து 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு அஸ்வதி (1½) என்ற குழந்தை இருந்தது. கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று சதீஷ் வெளியே சென்று விட்டார்.

இந்த நிலையில் மாலை 3 மணி அளவில் அவரின் வீட்டில் ரம்யா தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை (பொறுப்பு), சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

வீட்டில் ரம்யா தூக்குப்போட்ட நிலையில் பிணமாகவும், அருகில் கட்டிலில் குழந்தை அஸ்வதியும் பிணமாக கிடந்தாள். அதைத்தொடர்ந்து போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், குடும்ப பிரச்சினை காரணமாக ரம்யா தனது குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்று, பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. எனினும், போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சதீஷ்- ரம்யா தம்பதியருக்கு திருமணம் நடந்து 3 ஆண்டுகள் ஆவதால், இந்த சம்பவம் தொடர்பாக ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் மேல் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அரக்கோணம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story