கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நாமக்கல் பாலதண்டாயுதபாணி கோவிலில் 1,008 தீபங்கள் ஏற்றி வழிபாடு


கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நாமக்கல் பாலதண்டாயுதபாணி கோவிலில் 1,008 தீபங்கள் ஏற்றி வழிபாடு
x
தினத்தந்தி 10 Dec 2019 10:30 PM GMT (Updated: 10 Dec 2019 7:40 PM GMT)

கார்த்திகை தீபத்திரு விழாவையொட்டி நேற்று நாமக்கல் பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் 1,008 தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது. இதேபோல் நகர் முழுவதும் கோவில்களின் முன்பு பக்தர்கள் கூம்பு கொளுத்தி மகிழ்ந்தனர்.

நாமக்கல்,

கார்த்திகை தீபத்திருவிழாவை நேற்று இந்துக்கள் கோலாகலமாக கொண்டாடினர். இதையொட்டி பெண்கள் வீடுகள், தெருக்கள் மற்றும் கோவில்களில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.

நாமக்கல் பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் 1,008 தீபங்கள் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. காலையில் மகா சங்கல்பம், கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து பால தண்டாயுதபாணி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சாமி தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7 மணிக்கு 1,008 தீபங்கள் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கோவிலில் வைக்கப்பட்டு இருந்த விளக்குகளில் பெண்கள் தீபங்களை ஏற்றி வழிபாடு செய்தனர்.

கூம்பு கொளுத்தினர்

இதேபோல் நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவில், சந்தைபேட்டை புதூர் செல்வவிநாயகர் கோவில், குட்டைதெரு விநாயகர் கோவில், கடைவீதி சக்தி விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டன. இதில் பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.

மேலும் நகர் முழுவதும் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீதிகளில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு இருந்தது. பெரும்பாலான கோவில்களின் முன்பு கூம்பு (சொக்கப்பனை) கொளுத்தப்பட்டது. சுற்றிலும் நின்ற பக்தர்கள் கோ‌‌ஷங்கள் எழுப்பியவாறு உப்பை தூவினர்.

வாணவேடிக்கை

கார்த்திகை தீப திருவிழாவை யொட்டி நகர் முழுவதும் வாணவேடிக்கை நிகழ்ச்சியும் ஆங்காங்கே நடந்தது. வீடுகள் தோறும் பெண்கள் கொளுக்கட்டை மற்றும் சுண்டலை சாமிக்கு படைத்து, பின்னர் குடும்பத்தினருடன் சாப்பிட்டு மகிழ்ந்தனர். இதேபோல் நாமக்கல் ரெங்கநாதர் கோவில் படிக்கட்டுகளிலும் நேற்று 1,008 தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி மகிழ்ந்தனர்.

பரமத்திவேலூர்

பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் திருக்கார்த்திகை கிருத்திகையையொட்டி முருகனுக்கு சிறப்பு பூஜைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சிவலிங்க வடிவில் தீபம் ஏற்றி வழிபட்டனர். கந்தம்பாளையம் அருகே அருணகிரியில் வள்ளி, தெய்வானை உடன் முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கார்த்திகை கிருத்திகையையொட்டி சாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் காவிரி கரையில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவில் மற்றும் வள்ளி, தேவசேனா பாலசுப்பிரமணியர் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு, சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கோவில் முன்பு வைக்கப்பட்ட பீடத்தில் தீபம் ஏற்றப்பட்டது. மேலும் கூம்பு கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

இதேபோல நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் திருக்கார்த்திகை கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story