பருவமழை தாக்கத்தில் இருந்து நெற்பயிரை பாதுகாப்பது எப்படி? - கலெக்டர் சந்தீப்நந்தூரி ஆலோசனை


பருவமழை தாக்கத்தில் இருந்து நெற்பயிரை பாதுகாப்பது எப்படி? - கலெக்டர் சந்தீப்நந்தூரி ஆலோசனை
x
தினத்தந்தி 11 Dec 2019 10:30 PM GMT (Updated: 11 Dec 2019 2:04 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை தாக்கத்தில் இருந்து நெற்பயிரை பாதுகாக்க, வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ள நடவடிக்கைகளை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆலோசனை கூறி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை தாக்கத்தில் இருந்து நெற்பயிரை பாதுகாப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து வேளாண் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும். அதன்படி நெற்பயிர் மூழ்குவதை தடுக்க தாழ்வான பகுதிகளை இனம் கண்டு வயல்களில் தண்ணீரை வடிக்க வேண்டும். வயலில் தேங்கும் நீரை ஆழமான வாய்க்கால்கள் அமைத்து வடித்துவிட வேண்டும். வடிகால் வாய்க்கால்கள் தண்ணீர் தேங்காமல் வடியும் வகையில் பொதுப்பணித்துறையினரை அணுகி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே நேரத்தில் மழைநீரில் மூழ்கி உள்ள நெற்பயிர்களை பாதுகாக்க, வயலில் தேங்கும் நீரை ஆழமான வாய்க்கால்கள் அமைக்க வேண்டும். இளம் பயிர்கள் அதிக நாட்கள் நீரின் தேக்கத்தினால் தழை மற்றும் துத்தநாக சத்துக்கள் குறைபாடு ஏற்பட்டு இளமஞ்சள் அல்லது மஞ்சளாக மாறும் பட்சத்தில் தண்ணீரை வடித்தவுடன் ஏக்கருக்கு 2 கிலோ யூரியா மற்றும் 1 கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் இலைவழி உரமிடவேண்டும். பயிர் தண்டு உருளும் மற்றும் பூக்கும் தருணத்தில் தண்ணீர் தேக்கத்தினால் பாதிக்கப்பட்டால் ஏக்கருக்கு 4 கிலோ டி.ஏ.பி உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் முந்தைய நாள் மாலை வேலையில் கரைத்து மறுநாள் வடிகட்டி அதனுடன் 2 கிலோ யூரியாவை 190 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரத்தில் கைத்தெளிப்பான் மூலம் இலைவழி உரமிட வேண்டும்.

தண்ணீர் தேக்கத்தால் பயிர் வளர்ச்சி குன்றி காணப்பட்டால் தண்ணீரை வடித்தவுடன் ஏக்கருக்கு 22 கிலோ யூரியாவுடன் 18 கிலோ ஜிப்சம் மற்றும் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கை முந்தைய நாள் இரவு கலந்து வைத்து அதனுடன் 17 கிலோ பொட்டாஷ் கலந்து மேலுரம் இடவேண்டும் என்ற வேளாண் அதிகாரிகள் கூறியுள்ள நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும்.

இது தவிர இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் பயிர் சேதத்தை ஈடு செய்திட பிரதம மந்திரியின் பயிர்க்காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்திடலாம். விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டைநகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதையும் பொதுச் சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story