பஸ்மோதி அறுந்துகிடந்த வயரை கவனிக்காததால் பரிதாபம்: மின்சாரம் தாக்கி பெண் பலி


பஸ்மோதி அறுந்துகிடந்த வயரை கவனிக்காததால் பரிதாபம்: மின்சாரம் தாக்கி பெண் பலி
x
தினத்தந்தி 11 Dec 2019 10:45 PM GMT (Updated: 11 Dec 2019 3:31 PM GMT)

பஸ்மோதி அறுந்து கிடந்த வயரை கவனிக்காமல் மாட்டுக்கு தண்ணீர் வைக்க சென்றபெண், மின்சாரம் தாக்கி பலியானார்.

செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சென்னிவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி ஜோதி (வயது 40). இவர்களுக்கு சந்திரலேகா என்ற மகள் உள்ளார். ராமலிங்கம் ஏற்கனவே இறந்துவிட்டார்.

இதனால் ஜோதி மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி மகள் சந்திரலேகாவுடன் வசித்து வந்தார். கணவர் இறந்ததால், ஜோதி கறவை மாடு வளர்த்து, அதில் இருந்து வந்த வருமானம் மூலம் மகளை வளர்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு அந்த பகுதிக்கு வந்த சுற்றுலா பஸ் ஒன்று ஜோதியின் வீட்டில் இருந்த மின் வயரில் மோதியதில் அது அறுந்து விழுந்தது. அந்த வயர் மாட்டுக்கு தண்ணீர் வைக்கும் பாத்திரத்தில் கிடந்தது. இதை கவனிக்காத ஜோதி, நேற்று அதிகாலை வழக்கம் போல் கறவை மாட்டிற்கு தண்ணீர் வைப்பதற்கு பாத்திரத்தை எடுத்த போது, அவரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திேலயே பரிதாபமாக இறந்தார்.

உயிர் தப்பினர்

இதைபார்த்த உறவினர்கள் ஜோதி மயங்கிதான் கிடக்கிறார் என நினைத்து அவரை எழுப்ப முயன்றனர். இதனால் அவர்களை மின்சாரம் தாக்கியது. இதில் சுதாரித்து கொண்ட உறவினர்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர். இதன்காரணமாக அவர்கள் உயிர் தப்பினர்.

இது குறித்த புகாரின பேரில் செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story