மல்லூர் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு


மல்லூர் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 11 Dec 2019 10:00 PM GMT (Updated: 11 Dec 2019 6:00 PM GMT)

மல்லூர் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பனமரத்துப்பட்டி, 

சேலம் மாநகரில் இருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி மல்லூர் பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட வேங்காம்பட்டி பகுதியில் சேலம்-கரூர் ரெயில் செல்லும் தண்டவாளம் உள்ளது.

இந்த ரெயில் பாதையின் வழியாக வாழக்குட்டப்பட்டி, மூக்குத்தி பாளையம், கொமாரபாளையம், வேங்காம்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மல்லூர் பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் வருகிறார்கள். பின்னர் அங்கிருந்து சேலம், நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இதேபோல் மல்லூர், பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து வெண்ணந்தூர், ஆட்டையாம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்களும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு செல்லும் பொதுமக்கள் குறிப்பாக வாகன ஓட்டிகள் வேங்காம்பட்டியில் உள்ள ரெயில் பாதையை ரெயில்வே கேட் வழியாக கடக்க வேண்டி உள்ளது.

பல நேரங்களில் ரெயில்கள் செல்வதற்காக ரெயில்வே கேட் மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் காலை நேரங்களில் அலுவலகத்திற்கும், பள்ளிகளுக்கும் செல்வோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சில நேரங்களில் அந்த வழியாக ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட அவசர வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் நின்று விடுகின்றன. இதனால் இந்தப் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

மல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வேங்காம்பட்டியில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த கேட் அடிக்கடி மூடப்படுவதால், இந்த பாதையை நாள்தோறும் பயன்படுத்தும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக பல நேரங்களில் ரெயில்வே கேட் மூடப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

எனவே இதற்கு தீர்வாக இந்த பாதையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story