விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரெயில் நிலைய பொருட்களை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு அமீனாவால் பரபரப்பு


விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரெயில் நிலைய பொருட்களை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு அமீனாவால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Dec 2019 11:00 PM GMT (Updated: 11 Dec 2019 7:16 PM GMT)

விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் கரூர் ரெயில் நிலைய பொருட்களை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு அமீனாவால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர்,

கரூர்-சேலம் அகல ரெயில்பாதை அமைப்பதற்காக அப்பகுதியில் உள்ள நிலங்களை கையகப்படுத்தும் பணி 1999-ம் ஆண்டு நடை பெற்றது.

இதில் கரூர் வாங்கலை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலத்தை ரெயில்வே நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு இழப்பீடாக ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்தை ரெயில்வே நிர்வாகம் வழங்கியது. ஆனால் இழப்பீடு தொகை போதாது எனக்கூறி விவசாயி சுப்பிரமணியம் கடந்த 2010-ம் ஆண்டு கரூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு, சுப்பிரமணியத்திற்கு ரெயில்வே நிர்வாகம் ரூ.1 கோடியே 40 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இருப்பினும் இழப்பீடு தொகையை ரெயில்வே நிர்வாகம் வழங்கவில்லை.

நிறைவேற்று மனு தாக்கல்

இந்தநிலையில் சுப்பிரமணியம் 2018-ம் ஆண்டு கரூர் கூடுதல் நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்து ஏற்றுக்கொண்ட நீதிபதி, 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வழங்கிய தீர்ப்பில், இழப்பீடு தொகை வழங்கா விட்டால் கரூர் ரெயில் நிலையத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து ஜப்தி நடவடிக்கைக்காக கோர்ட்டு அமீனா கரூர் ரெயில் நிலையத்திற்கு சென்றனர்.

அப்போது இழப்பீடு தொகை வழங்க 2 மாதம் அவகாசம் ரெயில்வே நிர்வாகம் சார்பில் கேட்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை இழப்பீடு தொகை வழங்கவில்லை.

ஜப்தி நடவடிக்கை

இதையடுத்து விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் நேற்று கோர்ட்டு அமீனா, வக்கீல் ஆகியோர்கரூர் ரெயில் நிலையத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய வந்தனர். பின்னர் கரூர் ரெயில் நிலைய மேலாளர் ராஜராஜனிடம், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் படி கேட்டு கொள்ளப்பட்டது.

இதையடுத்து கரூர் ரெயில் நிலைய மேலாளர் சேலம் கோட்ட அதிகாரிகளிடம் பேசி, மேலும் ஒரு மாதம் காலஅவகாசம் கேட்டார்.

இதையடுத்து ஜப்தி நடவடிக்கைக்கு வந்த அமீனா அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் கரூர் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story