திருச்சிற்றம்பலம் அருகே குடிபோதையில் மனைவியை கட்டையால் அடித்துக்கொன்ற தொழிலாளி கைது


திருச்சிற்றம்பலம் அருகே குடிபோதையில் மனைவியை கட்டையால் அடித்துக்கொன்ற தொழிலாளி கைது
x
தினத்தந்தி 12 Dec 2019 10:15 PM GMT (Updated: 12 Dec 2019 5:27 PM GMT)

திருச்சிற்றம்பலம் அருகே குடிபோதையில் மனைவியை கட்டையால் அடித்துக்கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

திருச்சிற்றம்பலம்,

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஆவணம் கட்டுக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜா(வயது 45). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ரேவதி(38). இவர்களுக்கு போத்தியப்பன்(10), கார்த்திக்(8) என 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில், கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு நிலவி வந்தது. தினமும் ராஜா மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

கட்டையால் அடித்து கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜா வழக்கம் போல் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

தகராறு முற்றிய நிலையில் ராஜா, அங்கு கிடந்த கட்டையை எடுத்து ரேவதியை தாக்கினார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ரேவதி சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

கைது

இதுகுறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசமூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.

இந்த சம்பவம் குறித்து ரேவதியின் தந்தை சின்னத்தம்பி திருச்சிற்றம்பலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் கர்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.

பரபரப்பு

தொடர்ந்து ரேவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடிபோதையில் மனைவியை கட்டையால் தொழிலாளி அடித்து கொன்ற சம்பவம் திருச்சிற்றம்பலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story